Wednesday, June 30, 2010

நீ என்பது நானல்லவோ...

என் காலத்தின் சக்கரம் நீ!
நீ தவறிவிட்ட நிமிடம் நான்!

என் பக்கங்களின் ஆதிச் சுழி நீ!
உன் எழுத்துக்களின் முற்றுப்புள்ளி நான்!

என் உலகத்தின் ஆதிமானுடம் நீ!
நீ கடந்துசென்ற பாதை நான்!

என் வெளிச்சங்களுக்கு காரணம் நீ!
உன் இருளின் பிம்பம் நான்!



என் ஓசைகளின் பரம்பொருள் நீ!
உன் ஒற்றை மெளனம்  நான்!

நான் வரைந்த ஓவியம் நீ!
நீ கிறுக்கிய காகிதம் நான்!

என் வானில் முழு நிலவு நீ!
உன் உதிர்ந்த நட்சத்திரம் நான்!

நான் சேமித்த பொக்கிஷம் நீ!
நீ தூக்கி எறிந்த குப்பை நான்!

Thursday, June 24, 2010

நான் கடவுள்

சாரி ராஜி .. நீங்களும் கடவுள் பத்தி தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அதுக்குப் பிறகு ஏனோ ஒரு போஸ்ட் கூட போடமுடியலை. ஏதாச்சும் சாமி குத்தமா இருக்குமோ?

வழக்கமா எல்லா தொடர் பதிவுகளும், சின்ன வயசில் இருந்து என்று ஆரம்பிக்கும். அதே மாதிரியே நானும் ஆரம்பிக்கிறேன்.

`சின்ன வயசில் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பாட்டி வீட்டுக்குப் போயிருந்தபோது, பக்கத்து வீட்டு மரத்தில் எலுமிச்சை பழம் திருடி வீட்டுக்கு கொண்டு வந்தோம். திருடினா சாமி கண்ணைக் குத்திடும் என்று பாட்டி சொன்னதில் இருந்து கடவுள் என்பவர் அன்றிருந்து எனக்குள் ஒரு ஹீரோ ஆகிப்போனார்.

அதன் பின் எல்லாவற்றிற்கும் எனக்கு சாமிதான் அடிப்படை. நாலாவது படிக்கும் போது, `ஏன் இந்தியா பாகிஸ்தான் கூட சண்டை போடணும். சாமிக்கு சர்க்கரை பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டா, சண்டை வராதே-ன்னு நினைச்ச ஆளு நான். ஜாமிண்ட்ரி பாக்ஸ் தொலைஞ்சு போச்சுன்ன்னாக் கூட கடவுள்-க்கிட்ட சூடம் பத்தி வெச்சு தேடிச் தர சொல்லிக்கிட்டு இருந்தேன்.

வளர வளர நிறைய பிராத்தனைகள் இருந்தது. அது நிறைவேறாத போது கடவுள் மீது கோபம் வந்தது.. ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கிற என கோபத்தில் கத்தி அழுவேன். கொஞ்ச நாள் உன் மூஞ்சியிலியே முழிக்க மாட்டேன் என்று டூ விட்டுவிட்டு பின் எதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் சரண்டர் ஆகிவிடுவேன்.

அப்போதெல்லாம் சாமி வந்து ஆடுபவர்களைப் பார்த்தால் எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். நல்ல மனது உடையவர்களுக்கும் பக்தி நிரம்பியவர்களுக்கும்தான் சாமி வரும் என நினைப்பேன்.

அம்மா பிரேமா மேல்மருவத்தூர் கோயிலின் தீவிர பக்தை.. எனக்கும் அந்த கோயிலுக்கு இருமுடி கட்டி கூட்டி போவார்கள். பிரதோஷம், சனிக்கிழமை இப்படி விரதம் இருப்பதற்காகவே காரணம் தேடும் நல்ல மனசுக்காரி அம்மா பிரேமா.

கொடுமுடியில் மகுடேஷ்வரர் கோயில் உண்டு. ஆற்றங்கரையில் மிக அழகாக இருக்கும். அந்த கோயில்தான் பள்ளி காலத்தில் தோழிகளுடன் சுற்றிய பொழுது போக்கு இடம். பிளஸ் டூ படிக்கும் போது, பழனிக்கு பாதயாத்திரை போயிருக்கிறேன்.

படிப்பு முடிந்த்து கோவையில் நான் படித்த கல்லூரியும் மருதமலை அடிவாரத்தில். நான் தங்கியிந்த ஹாஸ்டல் அருகிலேயே பெருமாள் கோவில் இருக்கும். (அங்கே தரும் புளிசாதமும் சர்க்கரைப் பொங்கலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.நான் கோயிலுக்குப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்).  காலேஜ் போகும் போதெல்லாம் அந்த சாமிக்கு விஷ் பண்ணாமல் போனது கிடையாது.


பக்தி முத்திப் போய் ஊர் மாரியம்மன் கோயில் தீ மித்திருக்கிறேன்.. எல்லாம் நான் சென்னையில் வேலைக்குச் சேரும் வரைதான். அதன் பின் எனக்கும் கடவுளுக்குமான இடைவெளி பெருகியது.

மரம் சூழ கோயில் பார்த்த எனக்கு, சென்னையில் செங்கல் கட்டிடத்திற்குள் பார்த்த சாமிகளை பிடிக்கவில்லை. வேலை நேரம் காரணமாக கோயிலுக்கு போக பிடிக்காமல் போக என் போக்கும் மாறியது. அதற்கு காரணம் என் அலுவகத்தில் என்னுடன் வேலை பார்த்தவர்கள்.

`சிவ பெருமான் இப்ப இருந்தார்-ன்னா புளு கிராஸில் அரஸ்ட் பண்ணிருவாங்க.. புலித் தோல் போர்த்திக்கிட்டு சுத்தறார்` என கேலி செய்யும் ஆட்கள். சொல்லப் போனால் கடவுள் இல்லை என்னும் கூட்டம். அவர்களுடன் சேர சேர எனக்கும் சாமி குறித்த நம்பிக்கை மாறியது.. `நீயெல்லாம் ஈரோட்டுக்காரப் பொண்ணா, உங்க ஊரில் இருந்த பெரியார் எத்தனை சொல்லும் புத்தி வராதா உனக்கு` என என்னிடம் கேட்டபிறகுதான நிறைய யோசிக்க ஆரம்பித்தேன்.

கடவுள் பேரைச் சொல்லி நாம்தான் ஏமாற்றிக் கொள்கிறோம். லிட்டர் லிட்டராக சிலைகள் மேலே கொட்டும் பாலை, ரோட்டில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு தரலாமேன்னு என்று நான் யோசித்த நாளில், எனக்குள் நாத்திகமும் ஆத்திகமும் இல்லாத பெண்ணைக் கண்டேன்.

சாமி சாமி-ன்னு லட்ச கணக்கில் நன்கொடை தருகிறீர்களே, ஒரு ஏழை பொண்னின் கல்யாணத்திற்கு உதவி செய்யுங்களேன் -ன்னு எதிர் வாதம் செய்கிறேன் இப்போது வரைக்கும்.

`பொட்டப் புள்ளையா பொறந்திட்டு சாமியை பகைச்சுக்காத` என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதுக்காக கோயிலில் உட்கார்ந்திருந்தா காசு வந்திருமா, இந்த மாசம் வேலைக்கு போனாத்தான் சம்பளம் கிடைக்கும் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.

ஆக இப்போ எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சாமி பாட்டுக்கு கோயிலில் இருக்கட்டும், நாம் பாட்டுக்கு வேலையைப் பார்ப்போம். பாவமும் புண்ணியமும் ஏற்கனவே எழுதப்பட்டது. அதை மாற்ற முடியாது என விதியின் வீதியில் செல்கிறேன்...

Wednesday, June 9, 2010

அன்றிலிருந்து பூக்கள் பிடிக்கவில்லை


காலையில வாசல் தெளிக்கவும்
மணமணக்கும் பூவோடுதான்
லட்சுமி அத்தை வருவாள்!

முதல் குழந்தை பெத்துக்க
டவுன் ஆஸ்பத்திரிக்கு போனப்ப
மறக்காம பூ வெச்சிக்கிட்டாள்!

‘நீ வாக்கப்பட்டது
என் மகனுக்கா? இல்லை
மல்லிகை செடிக்கான்னு?
கேலியா பாட்டி கேட்பாள்!

பூ வாங்கன்னு போன
துரை மாமா, ராக்காயி கூட
ஓடினதால மல்லிகை புடிக்கலை.




‘இந்தியாவின் தேசிய பூ
தாமரை-ன்னு சொன்னது
பாரதி டீச்சர்தான்!

தண்ணீரில் ஒட்டாத தாமரை
இலையாட்டம், குடிகார புருஷனை
விலகி வந்தாங்க டீச்சர்.

அடம் புடிச்சு அழுதேன்னு
தஞ்சாவூரிலிர்ந்து பத்து ரூபாய்க்கு
ரெண்டு பூ வாங்கித் தந்தாங்க!

விபத்துக்கு டீச்சர் பலியாகி,
இறுதி ஊர்வலத்துல பார்த்ததுல
தாமரை பூவை புடிக்கலை!



 பிறந்தப்ப ரோசாப்பூ நிறமுன்னும்
ஊரே ரசிச்சதுன்னும்,
கொஞ்சறப்ப அம்மாச்சி சொல்லும்!

நேரு மாமா கணக்கா
சட்டையில பூ தைச்சு திரிவேன்
பள்ளிக் கூடம் போறப்ப!

ஒரு லட்சம் காசிருந்தாலும்
ரோசா பூவா வாங்கிருவான்னு
சிநேகிதக்காரங்க சொல்லுவாங்க!

காதலிக்கிறேன்னு சத்தியம் பண்ணியவன்
 மைதிலிக்கு ரோசாப்பூ தந்தான்னு
தெரிஞ்சதுல ரோசா புடிக்கலை...

Sunday, June 6, 2010

கேட்க மறந்த காதல்

கல்யாணம் ஆன நான்கு மாதத்தில் இதுவரை நூற்றி இருபத்தி எட்டு  தடவை கேட்டிருப்பாள் ஆனந்தி..

``ஏங்க உங்க கேர்ள் பிரெண்ட் என்ன பண்ணறாங்க. ஒருநாள் எனக்கு அறிமுகம் செஞ்சு வையுங்களேன்``..

`இல்லம்மா.. அப்படி யாரும் எனக்கு இல்லை` என நானும் இருநூற்று ஐம்பத்து ஆறு முறை பதில் சொல்லியிருப்பேன்..

இது ஒருநாளைக்கு ஒருமுறை என்று இருந்தால் கூட பரவாயில்லை. நாள் ஒன்றுக்கு பல முறையும், மாதம் ஒன்றுக்கு சில முறையும் ஆனந்தியால் கேட்கப்படும் கேள்வி.

`இன்னிக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவளை முதன் முதலில் எங்க பார்த்தீங்கன்னு சொல்லுங்க` என ஒற்றை கால் பிடிவாதமாய் நிற்பாள். அடுத்த நிமிடமே `சூப் சாப்பிடறீங்களா?` என சகஜ நிலைக்கு மாறிவிடுவாள். பரவாயில்லை இனி கேட்க மாட்டாள் என நினைக்கவும் முடியாது.

டிராபிக் சிக்னலில் பைக்கில் நிற்கும் போது, கண்ணுக்கு தட்டுப்படும் அழகான பெண்ணைக் காட்டி `இவ மாதிரி இருப்பாளா, உங்க ஆளு`என்று அன்றைய கச்சேரியை ஆரம்பிப்பாள்.

அதற்காக இதுவரைக்கும் ஒருநாள் கூட ஆனந்தியின் மீது கோபப்பட்டதோ, எரிச்சல்பட்டதோ இல்லை. விளையாட்டுப் பெண்ணின் சீண்டலாகவே தோன்றும்.

நான் வசந்த். இந்திய விவசாய குடிமகனின் மகன் என்ற காரணத்துக்காக கிடைத்த ஸ்காலர்ஷிப் பணத்தில் படித்துவிட்டு, இந்தியாவைத் தவிர பிற நாடுகளுக்கு வேலைப்பார்ப்பவன். டெல்லிவாசி, சமுதாயம் என்னை ஐ.டி ஊழியர் என்கிறது.

இலக்கண விதிப்படி 27 வயதில் பெண் பார்த்து 28-யில் நான் திருமணம் செய்துகொண்டவள்தான் ஆனந்தி..

முதல் இரவில் அவள் கேட்ட கேள்வியே, `வரதட்சனை வேண்டாம்ன்னு சொல்லி என்னை கட்டிக்கிட்டீங்க.. எதாச்சும் லவ் பெயிலியரா` என்பதுதான்.  வெடிச் சிரிப்பு சிரித்தபடி அவள் ஆப்பிள் கன்னத்தை கிள்ளினேன்.

கல்யாண களை, விருந்து எல்லாம் முடிந்து டெல்லியில் நானும் அவளும் தனிக்குடித்தனம் புகுந்தோம். வந்த முதல் நாளே, `இந்த வீட்டை உங்க காதலிக்காக பார்த்து பார்த்து அலங்கரிச்சு வைச்சிருப்பீங்க.. நான் புழங்கி அழுக்காக்கினா அவங்க கோபப்படமாட்டாங்களா?` என்று ஆனந்தி கேட்கும் போது, மெல்ல முருவலுடன் அவளின் தலைகோதி விட்டேன்.

அதன் பின், என்காதலி குறித்த அவளின் கேள்விகளும் என் பதில்களும் பழக்கமான ஒன்று.

அனுமார் தன் நெஞ்சை பிளந்து காட்டிய மாதிரி என்னாலும் முடிந்தால், என் இதயத்தை திறந்து காட்டி, அவளைத் தவிர யாருக்கும் அங்கே இடமில்லை என்பதை நிருபிக்கவேண்டும்..

என்ன சினிமாத்தனமாக பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஆனந்தியின் அடத்தில் ஒரு நாள் சிக்கிப் பாருங்கள் தெரியும்.

அன்று ஆபீஸ் பார்ட்டி முடிந்து வரும் போது மணி பனிரெண்டை தாண்டி இருந்தது.  டி.வியில் ஏதோ குத்துப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க, எங்கோ பார்வையை செலுத்தியபடி அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்ததும் `என்ன உங்க ஆளு கூட சேர்ந்து செம ஆட்டமா.. தண்ணி அடிச்சிருப்பீங்க போலயிருக்கு` என்று அர்த்த ராத்திரியில் குரல் உயர்த்தியவளுக்கு  அலட்சிய சிரிப்புடன் நான் நகர்ந்தது,  கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

`நில்லுங்க.. நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டு இருக்கேன்.. திமிரா போறீங்க.. என்னைப் பார்த்தா லூசு மாதிரி இருக்கா?`என்று கத்த ஆரம்பித்தாள். அழுகை சத்தமும் கேட்டது.

ஒருநிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை. பின் அவளருகில் சென்று கைகளை பிடித்தபடி அந்த கண்களை உற்று பார்த்தேன்.

என்ன நினைத்தாலோ அழுகையை நிறுத்திவிட்டு, `ஒருநாள் கூட உங்களுக்கு என் மேல கோபமே வந்ததில்லையா, ஏன் பதிலுக்கு என்கிட்ட, என் காதலைப் பத்தி கேட்டு சீண்டனும்ன்னு கூட தோணலையா?` என்றாள்.

`உன் குழந்தைதனமான முகத்தைப் பார்க்கும் போது, நீ எந்த தப்பும் செய்யலைன்னு தோணுது`என்றேன் அவள் கன்னம் வருடியபடி.

அந்த வார்த்தையில் உடைந்தவள் போல, விருக்கென என் கைகளை உதறி விட்டு, `இல்லைங்க..  நீங்க கேளுங்க.. அப்பத்தான் ரவி மாமாவைப் பத்தி சொல்ல முடியும்.. அவருக்கும் எனக்கும் இருந்த காதலைப் பத்தியும் சொல்ல முடியும்` என்றாள்.

Tuesday, June 1, 2010

பரிட்சை என்றாலும் பயம் எமக்கு....

 இது நான் எழுதப் போகும் ரெண்டாவது தொடர்பதிவு.. முதல் பதிவான ‘பேருந்தில் காதல் பதிவு” க்கு பனித்துளி சங்கர் அழைத்திருந்தார்.. ஓவர் பில்டப் குடுத்து ஆரம்பித்துவிட்டு, ‘சாரிங்க மக்கா.. எனக்கு அப்படி எந்த சம்பவமும் நடவக்கவில்லை.. நானெல்லாம் நல்ல பொண்ணாக்கும்ன்னு தப்பிச்சாச்சு..

இப்போ, அகல்விளக்கு ‘நான் கடந்து வந்த தேர்வுகள்”ங்கிற தலைப்பில் எழுத அழைத்திருக்கிறார்.. இதுக்கு மறுக்கமுடியாதே.. ஏன்னா நாங்கெல்லாம் எஜிகேட்டேட் பேமிலி-யாக்கும்.. சரியா..

‘எங்கம்மா பிரேமா ஸ்கூல் டீச்சர்...(இப்போ அம்மா மட்டுமல்ல, பெரியம்மா பொண்ணுங்க மூணு பேரும், மாமா பொண்னு, பையன் அவங்க மனைவி-ன்னு குடும்பமே டீச்சர் குடும்பம்.. அதில தப்பியது நான் மட்டும்தான்).  அதனால ரெண்டு வயசில இருந்தே ஏ.பி.சி.டி படிக்க வேண்டிய கட்டாயம்.. தோசை சாப்பிடும் போதுகூட ஒன்.டூ. திரி-ன்னு சொல்லிக்கிட்டே சாப்பிடணும்..
அது கூட பரவாயில்லை, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு யார் வந்திட்டாலும் போதும், ‘ பாபா பிளாக்‌ஷீப் ரைம்ஸ் சொல்லு.. ஐந்து கரத்தனை’ பாட்டு பாடுன்னு நம்மை வெச்சு ஒரு மினி எக்ஸிபிஷனே நடத்துவாங்க..

ஊரில் நான் யூ.கே.ஜி படிச்ச ஸ்கூலில் எங்கம்மாவும் டீச்சரா இருந்தாங்க.. அப்போல்லாம் டிக்டேஷன் -ன்னு ஒரு டெஸ்ட் இருக்கும். அதாவது மிஸ் இங்கிலீஷ்-ல ஒரு வார்த்தையை சொல்லுவாங்க.,. அதுக்கு ஸ்பெல்லிங் நாம எழுதணும். கொஞ்ச நேரம் முழிச்சிட்டு, மிஸ் வாட்டர் குடிக்க போறேன்னு ஜகா வாங்கிட்டு, நேரா எங்கம்மா கிளாஸ் ரூம்க்கு ஓடிப் போய், சரியா ஸ்பெல்லிங் கேட்டு எழுதுக்கிட்டு வந்திருவேன்.. எப்பூடி? 

ஆனா அன்னிக்கு ஆரம்பிச்சு காலேஜ் படிக்கிற வரைக்கும் எனக்கு இங்கிலீஷில் பீ என்ற வார்த்தைக்கும் டீ என்கிற வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாது.. b எழுத வேண்டிய இடத்தில் d எழுதிவேன்.. அதுக்காக எங்கம்மாக்கிட்ட முட்டி தேயற வரைக்கும் அடி வாங்கியிருக்கேன்.. பரிட்சை பேப்பரில் மிஸ் சரியா, அந்த வார்த்தைகளை மட்டும் தேடிப் புடிச்சு முட்டை சுழிப்பாங்க.. நம்ம பத்தித்தான் ஸ்கூலுக்கே தெரியுமே... இருந்தாலும் நாமதான் கிளாஸில் பஸ்ட் ரேங்க்.. இல்லாட்டி பிரேமாக்கிட்ட யார் வாங்கிக் கட்டிக்கிறது..

என்னதான் ஜாலியாக எழுத ஆரம்பித்தாலும், தேர்வு என்றால் எனக்கு ஒருவித பயமும் சோகமும் வரத் தான் செய்கிறது.. காரணம் என் வாழ்வில் நடந்த சம்பவங்கள்.. உண்மை சில சமயம் சுடும். எனக்கும் அப்படித்தான்..

`எங்க சயின்ஸ் டீச்சர் விமலாவுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது.. அதென்னவோ தெரியவில்லை.. எப்போதும் என்மீது ஒரு வன்மத்தோடே திரிந்தார்.. பத்தாம் வகுப்பு மாடல் தேர்வில், இங்கிலீஷ் செகண்ட் பேப்பரில் எனக்கு பின்னால் உட்காந்து எழுதிய லலிதா என்னைப் பார்த்து ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடை எழுத, அன்று சூப்பர்வைஸராக வந்திருந்த விமலாவின் கண்களில் மாட்டிக் கொண்டோம்..

`அவ என்னைப் பார்த்து எழுதறான்னு எனக்கு தெரியாது-ன்னு என்று நான் சொல்ல, இல்ல, அவளுக்கு தெரியும் என்று லலிதா சொல்ல, ஹெட் மாஸ்டர் முன்னால் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டோம்... அவளுக்கு பேப்பர் காட்டிய காரணத்துக்காக, எனக்கு 15 மார்க் குறைக்கப்பட்டது.. ஆனால் லலிதாவுக்கோ பத்து மார்க் தான் குறைக்கப்பட்டது.. அன்றைய நாளில் இருந்து எக்ஸாமில் யார் பக்கமும் திரும்பி பார்க்காமல் கடமையே கண்ணாக எழுதி பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தேன்..

அதன் பிறகு எங்க வீட்டில் மிகப் பெரிய பஞ்சாயத்து நடந்தது.. பஸ்ட் குரூப் எடு.. என்ஜினியரிங் படிக்கலாம்ன்னு என்று அக்காக்களின் ஆலோசனை.. ஓக்கேசனல் குரூப் எடு.. நிறைய மார்க் வரும்.. டீச்சர் டிரைனிங் சேரலாம் என்பது மாமாவின் ஆலோசனை.. நான் பொலிட்டிகல் சயின்ஸ் படிக்கிறேன் என்று சொன்னபோது குடும்பமே கதறி தீர்த்தது.. என்னை எந்த குரூப்பில் சேர்ந்துவது என குலசாமி கோயிலில் குறி கேட்டார்கள்.. சாமியாடி ஒருத்தரிடம் வாக்கு கேட்டார்கள்..


 ஒருவழியாக சயின்ஸ் குரூப் எடுக்கிறேன் என ஒத்துக் கொண்டு, ஸ்கூல் சேரப் போன சமயம், ஹெச்.எம்மிடம் நான் அரசியல் அறிவியல் குரூப்பில் சேர்கிறேன் என ஸ்பாட்டில் வைத்து சொல்ல, நான் ஏ.3 எனப்படும் குரூப்பில் சேர்ந்தேன்.. அதன் பிறகு வீட்டில் பூசை வாங்கியது தனிக்கதை.. நான் ஒன்றுக்கும் லாக்கியில்லாதவள் என நினைத்துவிட்டார்கள் வீட்டில்..

இவ்வளவு தூரம் போராடி ஏ.3 யில் சேர்ந்திருக்கிறோம்.. சாதித்து காட்ட வேண்டும் என்று வெறியோடு படிக்க ஆரம்பித்தேன்.. நைட் பன்னிரெண்டு மணி வரையிலுமோ, காலை மூணு மணிக்கோ எங்க ஊரில் யாராவது முணகும் சத்தம் கேட்டால், சத்தியமாய் நான் படிப்பதாய் அர்த்தம்.. அந்தப் படிப்பாளி நான்.. மிக அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தேன்.. ஆனால் நான் பிளஸ் டூவில் எடுத்தது ஆயிரத்து ஆறு மார்க்.. அந்த ஏமாற்றம் என்னை விரக்தியில் தள்ள, தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன்..

அப்போது எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை லா காலேஜில் சேர வேண்டும் என்பதுதான். என் சிறுவயது முதல் கொண்ட கனவல்ல, வெறி அது.. டி.வியில் வக்கீல்கள் வரும் சீன்கள் மட்டும்தான் எனக்குப் பிடித்தமானது..அந்தளவுக்கு வெறி.. எண்ட்ரன்ஸ் எக்ஸாமீக்கு என்னை தயார் செய்து கொண்டிருந்த நேரம், அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம்.. கருப்பை நீக்க வேண்டி ஆப்ரேஷன் செய்யச் சொல்லிவிட்டார்கள்.. அம்மாவுடன் நான் மட்டுமே.. ஆப்ரேஷனுக்கு முந்தி, பிந்தி என 20 நாட்கள் ஹாஸ்பிட்டல் வாசம்.. அம்மாவை பெட்டில் படுக்க வைத்துவிட்டு, ஹாஸ்பிட்டல் வராந்தாவில் உட்கார்ந்து நான் எண்ட்ரஸ் எக்ஸாமீக்கு படித்ததை என்னாலும் சரி, அந்த மருத்துவமனை கட்டிடங்களாலும் சரி மறக்க முடியாது.. படிக்கிற புள்ளை என நாங்க தங்கியிருந்த வராண்டாவில் எப்போதும் லைட் போட்டு வைப்பார் சசி நர்ஸ்.. கடந்து செல்லும் போது தலை தடவிக் தருவார் சுப்பராயண் டாக்டர். சமயங்களில் காபி போட்டுத் தருவார்கள்.

இப்படியாக கடக்க, அம்மாவுக்கு ஆப்ரேஷன் செய்த அடுத்த நாள் எனக்கு கோவையில் எண்ட்ரன்ஸ் எக்ஸாம். அம்மாவோ மயக்கம் தெரியாமல் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டு படித்திருக்கிறார்கள்.. காலை ஐந்து மணிக்கு பஸ் ஏறினால்தான் ஈரோடு போய் கோவைக்கு 9 மணிக்குள் போக முடியும்.. 10 மணிக்கு பரிட்சை.. அம்மாவிடம் சொல்லாமல் கிளம்ப எனக்கு மனமில்லை.. சொன்னாலும் புரியும் நிலையில் அம்மா இல்லை.. லா படிக்க வேண்டும் என்பது என் ஆசை.. என்ன செய்ய.. கலங்கிய கண்களுடன் கிளம்பி நின்றவளை, ஒட்டு மொத்த மருத்துவமனையும் `ஆல் தி பெஸ்ட்` சொல்லி வழியனுப்பியது.. எக்ஸாம் எழுதிவிட்டு திரும்பி வரும் போது அம்மா கண்விழித்திருந்தார்..

மறுபடியும் பஞ்சாயத்து, ஐந்து வருடம் லா படிக்க வைக்க முடியாது, காசு கரியாகும் என மாமா கொடி பிடிக்க, பெரியம்மா, அக்கா எல்லாரும் அதை வழி மொழிந்தார்கள்.. ஆனால் லட்ச ரூபாய் டெபாசிட் கட்டி என்னை டீச்சர் டிரைனிங்கில் சேர முன்வந்தார்கள். கேட்டால் அதில் வேலை நிச்சயம் என்றார்கள்.. அன்றில் இருந்துதான் எனக்கு டீச்சர்களையே பிடிக்காமல் போனது..

அப்புறம் எண்ட்ரன்ஸில் பாசாகு.. சீட் கிடைக்குதான்னு பார்ப்போம் என்றார்கள்.. ஒருவழியாக சீட் கிடைக்க, மறுபடியும் பஞ்சாயத்து.. டீச்சர் டிரைனிங் சேரு.. ரெண்டு வருஷத்தில் கோர்ஸ் முடிச்சிட்டு, மறுபடியும் லா படிக்க போ.. அதுக்குள்ள உனக்கு வேலையும் கிடைச்சிடும்.. உன் காசில் படிக்கலாம்ன்னு ஆளாக்குக்கு அட்வைஸ்.. ஆனால் நான் பிடிவாதமாய் நின்று கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி படிக்கவில்லை.. காரணம் நாமதான் லா சேர்ந்திட்டோம் என்பதாகவும் இருக்கலாம்,.. அதையும் தாண்டி கஷ்டப்பட்டு படிச்சதுக்கு பிளஸ் டூ ரிசல்ட் தந்த சூடாகவும் இருக்கலாம்.... பல அரியர் வைத்தேன். அதற்காக ஒருநாளும் வருந்தியது இல்லை.. ஆனால் கடைசி செமஸ்டரில் எல்லா பேப்பர்களையும் கிளியர் செய்து வெற்றிப் புன்னகையுடன் லா காலேஜை விட்டு வெளியே வந்தேன்..

நான்காம் ஆணு படிக்கும் போது, சென்னையில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் சேர, பயிற்சி திட்டம் ஒன்று உண்டு.. அதில் தேர்வாக எட்டு கட்ட பரிட்சைகள் இருக்கும்.. எந்த முன்னேற்பாடும் இல்லாமல் மிக இயல்பாக அதில் கலந்து கொண்டு, அந்த வருடம் தேர்வு எழுதிய 2653  மாணவர்களுள் 32 பேரி ஒருவராக தேர்வு பெற்ற சமயம்தான் உணர்ந்தேன், வெறும் அல்ஜிப்ராவும், காம்பவுண்ட் செண்டன்ஸீம், நேர் நேர் தேமாவும் நம் வாழ்க்கையை தீர்மாணிக்கப் போவதில்லை என....

ஆக இப்படியாக நான் தேர்வுகளை கடந்து வந்தேன்.. சரி.. இதுக்கு நாம தொடர் பதிவு எழுத கூப்பிடலாம்ன்னா யாரும் சிக்க மாட்டீங்கறாங்களே.... யாரை மக்கா மாட்டி விடலாம்?