Saturday, September 1, 2012

ஒலிம்பிக்- சுவாரஸ்யமான தகவல்கள்



மூன்றாவது முறையாக ஒலிம்பிக் ஒரே நகரத்தில் நடப்பது பெரும் கவுரவம். அந்த பெருமையை அடைந்திருக்கும் ஒரே நகரம் லண்டன். ஏதென்ஸ் நகரம் இந்த பெருமைக்கு உரியதாக இருந்தாலும் 1906-ம் ஆண்டு நடந்த விளையாட்டுப் போட்டி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையான ஒலிம்பிக்-ஆக அதன் நிர்வாக கமெட்டி அறிவிக்கவில்லை.

 ஒலிம்பிக்-யின் தாயகம் லண்டன் தான் என புதுசாக கொடி தூக்குகிறார்கள் சிலர். காரணம் பழைய இங்கிலிஷ் கிராமமான மூச் வென்லாக் என்ற இடத்தில் 1866-ம் ஆண்டு ஒலிம்பிக் முன் மாதிரியான விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. நவீன ஒலிம்பிக்கின் தந்தை இது. 1896-யில் பிறகு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக்-யைத்தான் வரலாறு கொண்டாடுகிறது என்பதில் ஏகப்பட்ட வருத்தம் இங்கிலாந்து வாசிகளுக்கு. 2012 லண்டன் ஒலிம்பிக்கை வென்லாக் விளையாட்டுப் போட்டி என அழைத்து ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள்.

 டாக்டர் வில்லியம் பென்னி புரோக்ஸ் என்பவர் முதல் ஒலிம்பிக் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு, இண்டர்நேசனல் ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார். 1994-ம் ஆண்டு ஐஒசி-(இண்டர் நேசன்ல் ஒலிம்பிக் கமிட்டி)-யின் பிரசிடெண்ட் ஆக இருந்த ஜியேன் ஆண்டோனியோ சம்ரஞ்ச் என்பவர் டாக்டர் பென்னி புரோக்ஸ்-க்கான மரியாதையை செய்து, அவர்தான் ஒலிம்பிக் கமெட்டியை நிறுவினார் என உலகம் அறியச் செய்தார்.

 பிரிட்டன் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பதக்கம் பெற்றுத் தந்த அரிஸ்டோகிராட் இந்தியாவில் பிறந்தவர். கிழக்கிந்திய கம்பெனி சார்பாக இந்தியா வந்து குடியேறியவர்களில் இவர்களது பெற்றோரும் அடக்கம்.

 லயூன்செஸ்ட்ன் எலியாட் என்பவர் ஒற்றைக் கையால் பளு தூக்கும் போட்டியில் 1986-ம் ஆண்டு ஏதென்ஸில் வெற்றி பெற்றார். 1955-ம் ஆண்டு ஒலிம்பிக் பற்றி வந்த முதல் கலர் பொழுதுபோக்கு திரைப்படமான ஜியார்டி, இவரைக் கருவாக வைத்துதான் உருவாக்கப்பட்டது..

ஒலிம்பிக் துவக்க விழா 27-ம் தேதி ஜீலை 2012 அன்று நடந்தது. சரியாக நூறு வருடங்களுக்கு முன் 1912ம் ஆண்டு ஸ்வீடனில் இதே நாளில் தான் ஒலிம்பிக் நிறைவுற்றது. நூற்றாண்டு வித்தியாசத்தை அறிவிக்கும் வகையில் அதே தேதியில் இந்த முறை துவக்கமானது.

 ஒலிம்பிக் நிகழ்ச்சிக்காக அங்கிகாரம் பெற்ற விளம்பரதாரர்கள் தவிர, வீரர்கள் உள்ளிட்ட பார்வையாளர் வேறு பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் வகையில் நடந்து கொண்டாலோ, அல்லது சுயவிளம்பரத்துக்காக ஆடையின்றி மைதானத்துக்குள் யாரேனும் வந்தாலோ இருபதாயிரம் பவுண்ட்ஸ் வரை அபராதம் என அறிவித்திருக்கிறது ஒலிம்பிக் கமிட்டி. (இந்திய மதிப்பில் 1720000ரூபாய்).

 ஆர்டிஸ்டிக் டைரக்டர் எனப்படும் டோனி பயல் பிரிட்டன் சினிமா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இயக்கத்தில் துவக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தது. அவருடைய ஸ்லம்டாக் மில்லினியர் படம் ஆஸ்கர் விருதுகளையும் எக்கச்சக்க புகழையும் அள்ளித் தந்தது. அப்படத்துக்கு இசை அமைத்த ஏ.ஆர் ரஹ்மான் க்கும் இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. அந்த நட்பின் அடிப்படையில் துவக்க விழாவில் ரஹ்மான் கலை நிகழ்ச்சி இருக்கும் என இந்தியர்களோடு உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். மீடியாக்களும் இதை உறுதி செய்தன. ஆனால் ரஹ்மான் நிகழ்ச்சி இடம் பெறாமல் போனதுக்கான காரணம் ஒலிம்பிக் கமிட்டி மட்டுமே அறியும்.

 ஒலிம்பிக் போட்டி வர்ணனைகள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் இரு மொழிகளிலும் நடந்தது. பிரிட்டனில் போட்டி நடப்பதால் ஆங்கில உச்சரிப்பு. சரி பிரெஞ்ச் எதற்கு என்று கேட்கிறீர்களா? சுவிட்சர்லாந்தில் அமைந்திருக்கும் இண்டர்நேசனல் ஒலிம்பிக் கமிட்டியின் அலுவக மொழி பிரெஞ்ச். இப்போது புரிந்ததா?

 அதிகாரபூர்வமான அறிவிப்பின்படி 7500 தன்னார்வலர் தொண்டு பணியாளர்கள் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழா அமைப்பு இவர்களுக்கு தெரிந்தால் வெளியே கசிந்து நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் இவர்கள் அனைவரைக்கும் தனித்தனியாக பயிற்சி தரப்பட்டது. மொத்தம் 284 முறை இவர்கள் பிராக்டிஸ் செய்து பழகியிருக்கின்றனர். இவர்களோடு சேர்ந்து 89 விலங்குகளும் துவக்க விழாவில் கலை நிகழ்ச்சியில் சிறப்பித்திருக்கின்றன,

 துவக்க விழாவில் பலரையும் அதிசியக்க வைத்த நிகழ்வு பிரிட்டன் அரசின் இலவச மருத்துவ சேவையான என்.ஹெச்.எஸ் (national health service) நடத்திய கலை நிகழ்ச்சிதான். 25 பள்ளிகளில் இருந்து 170 மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 9 நிஜ நோயாளிகளும் கலந்து கொண்டதோடு 3 டாக்டர்களும் கலந்து கொண்டனர். உலகம் ரசித்த இந்த நிகழ்ச்சிக்கு 600 பேரின் உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது.

 துவக்க விழாவில் 500-க்கும் மேற்பட்ட ஸ்பிக்கர்கள் மற்றும் 50 டன் எடை கொண்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

 ஒலிம்பிக்-யில் ஒவ்வோரு நிகழ்வும், போட்டியும் எப்போது நடக்க வேண்டும் என கார்பன் பிரிண்ட் காப்பி போல ஏற்கனவே ஒத்திகை பார்த்து செயல்படுத்துகிறது லண்டன் கமிட்டி. இது ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறை.

 ஒற்றைக் கையால் தேம்ஸ் நதியில் படகு செலுத்தியபடி ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்த பிரபல கால்பந்து வீரரும் முன்னால் கேப்டனுமான டேவிட் பெக்கம், தீபத்தை பிரிட்டனின் கிரேட்டஸ்ட் ஒலிம்பியன் என அழைக்கப்படும் ஸ்டீவ் ரெட்கிரேவ்-யிடம் ஒப்படைத்தார். துவக்க விழா நடைபெறும் ஸ்டேடியத்துக்கு ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வரும் வாய்ப்பு இவருக்குத்தான் தரப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வளரும் ஒலிம்பிக் வீரர்களாக ஏழு இளைஞர்கள் கையில் தீபத்தைத் தர அவர்கள் ஸ்டேடியத்தை சுற்றி வந்து தீபமேற்றியது ஒட்டுமொத்த பார்வையார்களுக்கு மட்டுமல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கே ஆச்சர்யம். இனி இளைய தலைமுறை ஒலிம்பிக் பயணத்தை தொடரட்டும் என ஸ்டீவ் சொல்லும் போது மீடியா ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனது.

 ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சியில் தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் எனப்படும் நடிகர் டேனியர் கிரேக் பக்கிங்கம் அரண்மணைக்குச் சென்று, எலிசபெத் ராணியை அழைத்துவரும் காட்சி ஒளிபரப்பானது. ஹெலிஹாப்டரில் பறந்து வரும் இருவரும் ஸ்டேடியத்துக்குள் பாராசூட் மூலம் குதிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. டேனியல் கிரேக் சினிமாவில் நடித்து அனுபவம் இருக்கும். ஆனால் 60 வயது ராணி எப்படி பாராசூட்டில் பறந்து குதித்தார் என உலகமே ஆச்சர்யமாய் பார்த்தது. பிறகுதான் ஹாலிவுட் காமெடி நடிகர் கேரி கேனரி பாராசூட் மூலம் குதித்தார் என இக்காட்சியை படமாக்கிய பி.பி.சி மீடியா அறிவித்தது.

போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் தங்கள் நாட்டு கொடியை பிடித்து வருவதுதான் மரபு. ஆனால் இந்த லண்டன் 2012-யில் நான்கு வீரர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. தெற்கு சூடானில் இருந்து வந்த அகதி ஒருவர் மற்றும் முன்னால் டச் மேற்கிந்திய தீவினர் மூன்று பேரும். ஒலிம்பிக்-யின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை ஏந்தி வந்தனர். ஒலிம்பிக் கமிட்டி சார்பாக, கொடியை ஏந்தி வந்தவர் ஐ.நா சபை தலைவர் பான் கீ மூன்.

முதல் தங்கப்பதக்கத்தை  தாங்கள்தான் வாங்குவோம் என எதிர்பார்த்திருந்த அமெரிக்காவிற்கு சீனா முதல் தங்கப்பதக்கத்தை வாங்கியவுடன் தாங்க முடியவில்லை. மகளீர் பிரிவின் 400 மீட்டர் நீச்சல் பிரிவில் 16 வயதே ஆன சீன வீராங்கனை யே ஷிவான் தங்கம் பதக்கம் வெல்ல இன்னும் அமெரிக்காவில் வயிற்றெரிச்சலை கிளப்பியதோடு, ஊக்க மருந்து புகாரையும் கிளப்பியது. உடனே தன் நாட்டு மீடியாவை சீனாவுக்கு அனுப்பி, ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதற்காக சின்ன வயதில் இருந்தே விளையாட்டு வீரர்களை சித்தரவதை செய்து பயிற்சி அளிக்கிறார்கள் என பரப்பரப்பு செய்தியையும் தொலைக்காட்சியில் வெளியிட்டது. சிறுவர் சிறுமியர்களின் கை கால்களை முறுக்கியும் கால்களை இழுத்து வளைத்தும், குச்சியால் அடித்தும் மிரட்டும் புகைப்படங்கள் மீடியாக்களில் வர பார்வையாளர்கள் சீனாவை திட்டித் தீர்க்கின்றனர்.


லண்டன் 2012-யில் 204- நாடுகளில் இருந்து சுமார் 10000 விளையாட்டு வீரர்கள் 302  வகையாக போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.

 

Sunday, November 20, 2011

பத்திரிக்கையில் வந்த என் ஆர்டிக்கிள்

நினைக்கும் போதே கோபம் எல்லை மீறி வருகிறது. எழுத உட்கார்ந்தால் இன்னும் இன்னும் டென்ஷன் தான் எகிறுகிறது. எல்லாம் இந்த தமிழ் சினிமாவின் விளைவுதான்.



சமீபத்தில் நான் பார்த்த படங்கள்தான் இந்த கடிதம் எழுதக் காரணம். அவன் இவன் படம் பார்த்த எல்லா பெண்களுக்கும் மனசில் முள்ளாய் குத்திய விசயம் அதில் வரும் ஒரு வசனம். ஹீரோவான விஷால், `பெண்களுக்கு பேண்டில் ஜிப் இருக்கா? அப்படி இருந்தா அந்த ஜிப் எதற்கு?`` என ஹீரோயின் ஜனனி ஐயரைப் பார்த்து கேட்பார். உடனே ஹீரோயினுக்கு வெட்கம் வந்து கூடவே காதலும் வரும். நியாயமாய் இப்படி ஒரு கேள்வி கேட்டவனை காலில் கிடப்பதை கழட்டி அடித்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் பெண்ணுக்கு காதல் வருகிறது. இத்தனைக்கும் அந்த ஹீரோயினுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேடம்.

போலீஸ் யூனிபார்ம் போட்ட பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால், வேறு என்னத்தைச் சொல்லுவது? அடுத்து தேநீர் விடுதி என்ற படம். அதில் ஹீரோ, `பருவமடைந்த பெண்களுக்கு உண்டான அடையாளம் உன்னிடம் இல்லை` என ஹீரோயின் யிடம் சொல்வார். என்ன அந்த அடையாளம் என அந்தப் பெண் கேட்கும் போது, கேவலமான கமெண்ட் அடிப்பார். அந்த வெட்கத்தில் ஹீரோயினுக்கு காதல் வருகிறது.


இந்த தமிழ் சினிமாக்கள் ஏன் பெண்களை இப்படி சித்தரிக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் `ஈவ் டீசிங்` குற்றத்துக்குள் வர வேண்டியது. ஆனால் அந்த கதாநாயகிகளுக்கு காதல் வந்தது போல் காட்சி அமைத்திருக்கிறார்கள்.


அப்போ, ஈவ் டீசிங் செய்வதாலும், பெண்ணை கேவலப்படுத்தி கமெண்ட் அடிப்பதாலும் ஒரு பெண்ணுக்கு காதல் வருமா? என்ன கொடுமை இது?


எம்.ஜீ.ஆர், சிவாஜி காலத்தில் ஹீரோ தன் பாட்டுக்கு இருப்பார். ஹீரோயின்கள் தேடிப் போய் காதலித்தார்கள். ரஜினி, கமல் காலத்தில் ஹீரோயின் மனதைக் கவர, `கண் தெரியாதவர்களுக்கு உதவுவது, சிறு பிள்ளைகளுடன் விளையாடுவது, ஹேண்ட் பேக் திருடியவனை ஓடிப் பிடிப்பது` என காட்சிகள் வரும்.


விஜய், அஜீத் வருகை சமயங்களில், ஒரு முறை தெரியாமல் ஹீரோவும் ஹீரோயினும் இடித்துக் கொண்டாலே காதல் வந்து மலேசியாவுக்கு டூயட் பாடப் போனார்கள். தனுஷ், சிம்புவும் திரைக்கு வந்த போது, வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவனையும், நடு ரோட்டில் நாலு பேரை போட்டு அடிப்பவனையும் ஹீரோயின்கள் காதலித்தார்கள். இப்போ ஈவ் டீசிங் காலமாயிற்று. வாழ்க தமிழ் சினிமா.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு, யாரேனும் சினிமாக்காரர், `அதெப்படி சமூதாயத்தில் நடக்கிறத்தைத் தான் நாங்க சொல்லறோம். மத்த மொழி சினிமாவைப் பார்த்தீங்கன்னா?` என்று பேச ஆரம்பித்தால் நானும் பக்கம் பக்கமாய் பேசுவேன்.


தமிழ் சினிமாவைப் பார்த்துதான், இந்த சமுதாயம் சில விஷயங்களை பின்பற்றுகிறது. உடை, ஹேர்ஸ்டைல், நண்பர்களை அழைக்கும் விதம், வீட்டில் பொய் சொல்லும் விதம் என பல அம்சங்களில் இளைஞர்களுக்கு சினிமாதான் முன்னோடியாக இருக்கிறது. காதல் என்னும் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் சினிமாதான் அவர்களுக்கு வழிகாட்டி.

இந்த நிலையில், பொறுக்கித்தனம் செய்பவனையும், முகம் முழுக்க தாடியுடன், அழுக்கு லுங்கியில், கையில் சிகரெட்டுடன் திரிபவன் மீது கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு காதல் வருகிறது என்றால், தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.


ஆக ரவுடியைத்தான் இந்த காலத்துப் பெண்கள் விரும்புகிறார்களா? குடிகாரன் ஒருவன் ரோட்டில் வம்பு இழுத்தால், ஒன்று ஒதுங்கி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் `பளார்` என அறைய வேண்டும். அதை விடுத்து அவன் மேல் மையல் வருவதாக காட்சி அமைப்பதன் மூலம் தமிழ் சினிமா சொல்ல விரும்புவது என்ன? இல்லை இப்படி பொறுக்கிகளை தேடிப் பிடித்து காதலிக்கும் அளவுக்கு முட்டாள்களா இன்றைய பெண்கள்? படித்த பெண்களின் ரசனை இந்த அளவுக்கா கீழ் இறங்கி விட்டது?


எம்பது-க்கும் முந்தைய கால சினிமாக்களில், வேலை பார்த்து குடும்பத்தையும் கவனித்த ஹீரோவும் ஹீரோயினும் காதலித்தார்கள். தொன்னூறு சமயத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் காதலித்தார்கள். இப்போது மீசை முளைக்காமல் அரை டவுசரில் சுற்றுபவனும், குழந்தைத்தனம் மாறாத பதிமூன்று வயதுப் பெண்ணும் காதலிக்கிறார்கள்.
படம் பார்க்கும் போதே, இந்த காதல் தேவையா, டைரக்டர் இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடுங்க` என தியேட்டருக்குள்ளேயே கத்த தோன்றுகிறது.

நிஜம் வேறு, நிழல் வேறு.. நீங்கள் ஏன் சினிமாவை பார்த்து வாழ்க்கையோடு குழப்பிக் கொள்கிறீர்கள் என கேட்க்கலாம். இன்றைய இளசுகள் சினிமாவில் வரும் சில காட்சிகளின் அடிப்படையில் தவறான பாதையில் செல்கிறார்கள் என்பது அன்றாடம் வரும் செய்தித்தாள்கள் காட்டுகின்றன. ஊர் அறிந்ததே இத்தனை இருக்கும் போது, வெளியே தெரியாதது எவ்வளவு இருக்கும்?

ஏழைகளுக்கு உதவுவது, ஊனமுற்றோரை மதிப்பது, படிக்க இல்லாதவருக்கு பீஸ் கட்டுவது என எத்தனையோ நல்ல விஷயங்களை சினிமாக்காரர்களைப் பார்த்துதான் பொது மக்களும் செய்கிறார்கள். இதில் பெண்களில் ரசனையை கேலி செய்து அவர்களை முட்டாளாகக் காட்டுவதில் யாருக்கு என்ன லாபம்?
சினிமாவில் கோலோச்சும் பெண்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.



Tuesday, June 14, 2011

நண்பேண்டா என்ற பெயரில் சூரியகதிர் பத்திரிக்கையின் வந்த என் கதை

இந்த காதல் கதைகளில் வருமே, ஒரே நேரத்தில் மனது குளிர்ச்சியாகவும் அதே சமயம் வெப்பமாகவும் இருக்கும் என்று அதுபோலத்தான் எனக்கு கடந்த வாரம் முழுக்க இருந்தது. எல்லாம் ரிஷிநாத்தின் நிலையைப் பார்த்துதான். எதிரியாக இருந்தாலும் நிலை குனித்து நிற்கும் போது நாம் வருத்தப்படுவோம். ஆனால் ரிஷிநாத் எனக்கு உற்ற நண்பன். இருப்பினும் அவன் இன்று இருக்கும் நிலையில் வேடிக்கை பார்த்து சிரிக்கும் உள்ளங்களுள் நானும் ஒருவன்.

ஹலோ, ஹலோ, உடனே என்னைப் பற்றி தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். மிக சுருக்கமாக நடந்த சம்பவங்களை கூறிவிடுகிறேன்.

ராம் கோபால் சர்மாவைத் தெரியுமா? மூன்று முறை தேசிய விருது வாங்கியவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யபடும் தமிழருமான இன்றைய முன்னனி சினிமா இயக்குனர். அவருக்கு இந்த கதையில் என்ன கேரக்டர் என்கிறீர்களா? ரங்கசாமியை ரிஷிநாத் ஆக்கிய பெருமைக்குரியவர் அவர்தான். புலிய குளம் கிராமத்தில் துண்டு துக்கடா நாடகங்களில்யெஸ் பாஸ் சொல்லிக் கொண்டிருந்த ரங்கசாமி கெட்டுப் போக பட்டணம் வந்தான். யார்  யார் கை, காலையோ பிடித்து, மூன்றாம் பிறை கமலஹாசனைப் போல குரங்கு பல்டி அடித்து ஒன்ரறையனா இயக்குநரிடம் எடுபிடியாக சேர்ந்தான். ஆனால் வெளியில் அவருடைய அடுத்த பட அசிஸ்டண்ட் என்று சொல்லிக் கொள்வான். அந்த இயக்குநரும் நம் ராம் கோபால் சர்மா-வும் பார் நண்பர்கள். பார்க்கும் போதெல்லாம் பல்லிளிக்கும் நம் ரங்க சாமியை மைண்டில் ஒரு ஓரத்தில் வைத்திருந்த ராம்கோபால் சர்மாவுக்கு, அப்பாவி ஒருவன் அநியாயத்தை தட்டிக் கேக்கும் புது கான்செப்ட் கதைக்கு ஒரிஜினாலிட்டி தேவைப்பட்டது. அப்படித்தான் நம் ரங்கசாமி ரிஷிநாத் ஆனான். குருட்டுப் பூனைக்கு கிடைத்த அதிர்ஷடம் என்பார்களே, அப்படித்தான் நம் ரங்கசாமியை சாரி, சாரி ரிஷிநாத்தை சினிமா உலகம் கேலி செய்தது. ஆனால் அவனோ அதைப் பற்றி கவலைப் படாமல் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கார்டு வாங்கினான். கனல் கண்ணனிடம் சண்டைப் பயிற்சி எடுத்தான். ஆனால் என்னதான் கலா மாஸ்டர் ஈஸியான ஸ்டெப் சொல்லிக் குடுத்தாலும் அவனுக்கு டான்ஸ் மட்டும் வராமல் அடம் பிடித்தது. இருப்பினும் நம்ம ரிஷிநாத் படத்தின் ஷீட்டிங் ஆரம்பம் ஆனது.

இங்கேதான் நான் எண்ட்ரி ஆகிறேன். சி. பாஸ் செய்துவிட்டு கேமரா மேல் கொண்ட காதலால் கோடம்பாக்கத்தை சுற்றிவரும் இளைஞர்களுள் நானும் ஒருவன். உடனே தண்டக் கேஸ் என நினைத்து விடாதீர்கள். பத்திரிக்கைகளில் நீங்கள் பார்த்து ரசிக்கும் சினிமாக்காரங்களின் போட்டோக்கள் நான் எடுப்பதுதான். என்னுடன் படித்த நண்பர்கள் எல்லாம், ஆடிட்டர் என்ற அடைமொழியுடன் மாசத்தில் லட்சத்தை தொடும் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்க, நானோ திரிஷாவையும், நயன் தாராவையும்ஸ்மைல் பிளிஸ்’ சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு ஆத்ம திருப்தியிருந்தால் விடாமல் சினிமாக்காரர்களை துரத்துவேன். அப்படித்தான் ரிஷிநாத் அறிமுகம். பொதுவாக புது முகங்களுக்கு முதல் போட்டோ ஷீட்டிங்கில் பயம் இருக்கும். அவர்களின் முதல் அறிமுகம் என் கேமரா கண்களின் வழியில்தான் என்பதால் என்னிடம் அதிகபட்ச மரியாதையோடு நடந்துகொள்வார்கள்.

ஆனால் இந்த சித்தனுக்கும் எத்தனாக ரிஷ்நாத் இருந்தான். கீழே பார்க்கச் சொன்னால் ஒன்றரை கண்ணில் விளித்தான். மெல்லிய புன்னகையை வீசச் சொன்னால் மதன் பாபு மாதிரி விடாமல் சிரித்தான். இரண்டாவது காஸ்டியூம் மாற்றத்திற்கே செர்ரி பழ ஜீஸ் கேட்டான். ` போட்டோ ஷீட்டில் ஒழுங்கா நிற்கக் கூட தெரியல,இவனெல்லாம் என்ன மூஞ்சின்னு சினிமா நடிக்க வந்திட்டான்` என்று வாய்விட்டு கதறிய என் அஸிஸ்டண்டை அடக்கி, திக்கித் திணறி நான் எடுத்த போட்டோக்கள் ரிஷிநாத்தை பாதித்திருக்க வேண்டும். பத்திரிக்கையில் அவன் படம் வந்த அன்றே தாஜில் எனக்கு டிரீட் வைத்து தாஜா செய்தான். வேறென்ன `நண்பேண்டா`ன்னு அவனுடன் நான் கை குழுக்க வேண்டுமாம்.

அடுத்த நாள் காலையில் இருந்து அப்படி ஒரு அன்புத் தொல்லை ஆரம்பமானது எனக்கு. என் காதலி கீர்த்தி கூட நேரம் கிடைக்கும் போதுதான் போன் பண்ணுவாள். இவனோ அரை மணி நேரத்திற்கு ஒருமுறை போன் செஞ்சு, `இப்ப எங்கிருக்க பாஸ், நான் பாலு மகேந்திரா சாரை மரியாதை நிமித்தமா சந்திக்கப் போறேன்`ன்னு தவறாமல் தகவல் தருவான். இதற்கு இடையில் சாப்பிட்டியா, வெயில் எப்படி, இன்னிக்கு என்ன பிளான்னு விடாமல் எஸ்.எம்.எஸ் அனுப்புவான். ஒருவகையில் பார்த்தால் ரிஷிநாத் அப்பாவி என்றுதான் தோன்றும். ஹோட்டலில் பெப்பர் பாட்டில் அழகாக இருந்தால் பேண்ட் பாக்கெட்டில் பதுக்குபவன், சினிமாவின் அதி நாகரிக கலாச்சாரத்தில் ஒட்ட முடியாமல் தவித்தான். அந்த பரிதவிப்பே எனக்கு அவன் மீது அன்பை ஏற்படுத்தியது. ஆனால் சில சமயம் அவனது செயல்கள் எரிச்சலின் உச்சகட்டமாக இருக்கும்.

`மணி ரத்னம் சாரை ஏர்போர்ட்டில் பார்த்தேன், எனக்கு நல்ல போட்டோஜிக்னிக் பேஸ்-ன்னு சொன்னார்` என கூச்சப்படாமல் அவன் சொல்ல, நானோ அது போட்டோஜெனிக் என திருத்தியும் அவன் திருந்துவதாக இல்லை. `பேஸ் புக்கில் தீபிகா-ன்னு ஒரு பொண்ணு ஹாய் சொல்லிருக்குப்பா, ஒருவேளை தீபிகா படுகோனா இருக்குமோ, அடுத்த இந்தி படத்துக்கு அந்த புள்ளையை ஹீரோயினாக புக் பண்ண சொல்லணும்` என்பான். நடுராத்திரி பன்னி்ரெண்டரைக்கு போன் பண்ணி, பாஸ் பி.எம். டபிள்யூ இன்னிக்கு மார்க்கெட் பிரைஸ் என்னன்னு நெட்டில் பாரு. நாளைக்கு காலையில் நம்ம வீட்டு வாசலில் நிக்கணும்` என்று அலப்பறையை கிளப்புவான். இடையிடையே அம்பானிக்கு பொண்னு இருக்கா பாஸ், வீட்டில் அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரிக்கிறாங்க` என கண் சிமிட்டுவான்.  `மச்சான் மலேசியா கலை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டிருக்காங்க, என்ன கலரில் டிரஸ் எடுக்கலாம்` என்று ஸ்பென்ஸர் வாசலில் வைத்துக் கேட்பான். அனுஷ்காவுடன் போட்டோ ஷீட்டிங்-யில் இருக்கும் போது, பாஸ், நீலாங்கரையில் பங்களா வாங்கலாம்ன்னு இருக்கேன். நீ எந்த இடத்தை செலக்ட் பண்ணற`ன்னு திரி பத்த வைப்பான். இப்படியாக அவனது பாஸ் அழைப்புகளில் என் டைம் பாஸ் ஆனது.

ராம் கோபால் சர்மாவின் இயக்கம் என்பதால் அவனது படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. புத்தாண்டில் அவனது கொள்கைகளை கேட்டு ஒரு டிவி பேட்டி எடுக்க, மற்றோரு டி.வியோ அவனை கிராமத்து பொங்கல் பற்றி பேசச் சொன்னது. நாட்கள் நகர்ந்து தீபாவளியும் வந்தது. ஆனால் ரிஷிநாத்தின் படம் மட்டும் வெளியாகிற வழியைக் காணோம். மெகா பட்ஜெட், அதிக தியேட்டர் வேண்டும், எங்கே படம் வெளியானால் மார்க்கெட் சரிந்துவிடும் என முன்னனி நடிகர் செய்யும் சதி என கதைகள் இறக்கை கட்டி பறந்தன.

`நம்ம படம் அடுத்த வருஷம் டாப் லிஸ்டில் இருக்க போவுது. எப்படியும் ஐந்நூறு நாட்கள் ஓடும். என் இரண்டாவது படம் வந்துதான் இந்த அனலை குறைக்கணும்`ன்னு பார் தவறாமல் உளறினானே, தவிர வருஷம் ரெண்டாச்சே இன்னும் படம் பெட்டிக்குள்ள தூங்குதே என்று அவன் நினைத்ததாய் தெரியவில்லை. ஒருவழியாய் படம் ரிலிஸாகிற தேதி குறிக்கப்பட்டு, பின் தள்ளப்பட்டு, முன் தள்ளப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது. நண்பனின் படமாச்சே, அதுவும் ராம்கோபால் சர்மா படமாச்சே என நான் படபடப்பில் இருக்க அவனோ, ஆனந்த பவனில் ரசமல்லாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். `நம்ம படம் வரலாறு படைக்கும் பாஸீ, நீ ஏன் பயப்படற, நடிச்சிருக்கறது நான்னு மனசில் வைச்சுக்கோ` என்று அவன் திமிறில் குளற நான் பீதி அடித்து நின்றிருந்தேன்.

ரிஷிநாத் அத்தோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை. படம் ரிலிசாகிற நேரம் அவன் செய்த காரியம் தான் இன்று அவனை சோற்றுக்கு ஜிங்சாங் பாட வைக்கிறது.விசயம் இதுதான். `மக்கா, ராம்கோபால் சர்மா படத்திலேயே முதல் எண்ட்ரி. திரையுலகமே என்னை எதிர்பார்க்குது. அதுக்கு எதாவது செய்யணும் இல்ல, சூப்பரான ஸ்கிரிப்ட் ரெடி. நாமே நடிச்சு நாமே இயக்குறோம். அட எவன் கிட்டேயும் கை நீட்டாம, சொந்த காசுல படம் எடுக்கறோம். எப்பூடி? என அவன் தட்டிவிட்ட மெசெஜில் தாறுமாறான கோபத்தில் திரிந்தார்கள் கோடம்பாக்க வாசிகள்.

ஒருவழியாக புலி வந்தது. ஆனால் அத்தனை சீக்கிரத்தில் பூனை குரலில் பதுங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆமாங்க. ரொம்ப ரொம்ப சுமாரான படத்துக்கு பக்கத்தில் இருந்தது இளைய நாயகன் ரிஷிநாத் நடித்த `மெளன ஆயுதங்கள்`. பத்திரிக்கைகள் கிழி கிழிக்க, மக்களோ, தியேட்டரை புறக்கணித்து அந்த காசில் பிரியாணியும் பேபி கார்னும் வாங்கி சாப்பிட்டார்கள். நம்ம நாயகனும், இன்னும் ஒரு வாரத்தில் படம் பிக்கப் ஆகும் என தம் கட்டிக் கொண்டிருந்தான். ஆனது, ஆம் ஒரே வாரத்தில் படம் தியேட்டரை விட்டு கெட் அவுட் ஆனதில் ஆல் அவுட் ஆனார் ரிஷிநாத்.

நிச்சயமாய் ராம் கோபால் சர்மாவிற்கு இது பேரடி. ஆனால் அவர் வழக்கம் போல புத்தக விழாவில் குத்துவிளக்கு ஏற்றினார். டிவிட்டரில் ஏம் நார்மல் மேன்` என எழுதினார். அடுத்த பட டிஸ்கஷனுக்கு .ஆர்.ரஹ்மானுடன் லண்டன் போனார். இங்கே ரிஷிநாத்தோ பட தயாரிப்பு தந்த வீடும் காரும் போய், பழைய படி தீநகரில் நண்பன் மேன்ஷனில் ஒதுங்க வேண்டிய நிலை. அவன் மீது வஞ்சகம் வைத்திருந்த அனைத்து இயக்குநர்களும், போன் போட்டு துக்கம் விசாரித்ததில் பெரும் கேலியிருந்தது.

ஆனாலும் ரிஷிநாத் திடமாய் நின்றான். தமிழ் சினிமா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்தான். மற்ற நடிகர்கள் தன்னை சதி செய்து கவிழ்த்து விட்டதாக அறிந்தவர் தெரிந்தவரிடம் புலம்பினான். ஆயினும் மீசையில் ஒட்டிய மண்ணை மறைத்தான். கூடவே என்னிடம் பேசுவதையும் தவிர்த்தான். மனசு கேட்காவிட்டாலும் விட்டது தொல்லை என நான் இருக்க,கீர்த்தி தான் என் தலையில் தட்டிஏண்டா, இத்தனை நாள் அந்த ஆள் கூட சுத்தினே. ஒண்ணா தண்ணி அடிச்சீங்க. படம் பிளாப் ஆகியிருக்கறவருக்கு ஆறுதலா இல்லாம, கழட்டிவிட பார்க்கிறியேஎன்று அட்வைஸ் பண்ணினாள். நானும் நண்பேண்டா என சிலிர்ந்து விசாரித்ததில் கிடைத்த உண்மை, ‘படத்துக்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் ராம் கோபால் சர்மா, கறுப்பை வெள்ளையாக மாற்றவும், அந்த வருட ஆடிட்டிங்-க்கு கணக்கு காட்டவும் தான் சொந்த காசில் படம் எடுத்திருக்கிறார். அதுவும் மண்ணை கவ்வ வேண்டும் என்று அவர் பண்ணிய பிளான் நூற்றுக்கு நூறு சதவீதம் வேலை செய்ததில் பாதிக்கப்பட்டவன் தான் ரிஷிநாத் அதாங்க நம்ம புலிய குளம் ரங்க சாமி.

அறிந்த உண்மையை அவனிடம் சொல்லவும் தயக்கமாக இருந்தது. அதே சமயம் அவன் பண்ணிய பந்தாவுக்கு சரியான அடி என்றும் மனதுகெக்கக்கேகொட்டியது. இப்படியாக ரிஷிநாத்தின் நிலையைப் பார்த்து,  இந்த காதல் கதைகளில் வருமே, ஒரே நேரத்தில் மனது குளிர்ச்சியாகவும் அதே சமயம் வெப்பமாகவும் இருக்கும் என்று அதுபோலத்தான் எனக்கு கடந்த வாரம் முழுக்க இருந்தது.