Monday, September 27, 2010

இது பார்த்த கதை

பாரதி ராஜா படம் பார்த்திருக்கிறீர்களா? அது மாதிரி ஒரு அக்மார்க் கிராமத்துப் பெண்-தான் நா ன். ஸ்கூல், காலேஜ் என எல்லாவற்றிலும் நகரத்து வாசனையே அறியாமல் வளர்ந்தேன். அப்படி ஒரு பெண்ணுக்கு சென்னை நகரத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? வாரம் ஒரு சினிமா, ஹோட்டல், பீச், பார்க், ஷாப்பிங் என்று சுத்தி சந்தோஷமாய் காலம் கழிக்கலாம். ஆனால் என்னைக் கேட்டாலே அலறுவேன். இந்த நகரமே வேண்டாம் இறைவா.. மறுபடியும் கிராமத்தில் விட்டுவிடு ன்னு கெஞ்சுவேன்.

உடனே நகரத்தின் வேகத்தில் என்னை ஒட்டிக் கொள்ள முடியாமல் கிராமத்து நினைவுகளில் வாடி தனிமையில் தவிக்கிறேன் என எண்ணினால் சாரிங்க..... என் பிரச்சனை வேற. ரீல் இல்லாமயே என் பிளாஸ்பேக்கை சுத்திகாட்டினால்தான் புரியும்.


என் வீட்டுக்காரர் இங்கிருக்கும் தனியார் அலுவலகத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார். நானும் நர்சரி பள்ளி ஒன்றில் டீச்சராய் இருக்கிறேன். சென்னைக்கு வந்து வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு, முதல் நாள் ஸ்கூலுக்கு போகும் போது, மத்த டீச்சரெல்லாம் என்கிட்ட 'தனிக் குடித்தனமா, சொந்த ஊரு என்ன, இங்க உங்க வீடு எங்க-ன்னு' விசாரிச்சாங்க. நானும் அக்கறையா சொல்ல, நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க. இப்பத்தான் புரியுது அவங்களும் என்னை மாதிரியே கஷ்டப்பட்டிருக்காங்க. அப்படி என்னதான் கஷ்டம்ன்னு கேக்கறீங்களா?


இதோ ஆரம்பிக்கிறேன்.


இங்க வந்து சம்பளம் வாங்கி முதல் வார ஞாயிறு அவுட்டிங் பிளான் போட்டோம். காலையிலேயே கிளம்பி ஈ.சீ.ஆர் ரோடு போறது. லஞ்ச், டின்னர் எல்லாமே அங்கதான். அப்படியே சினிமாவும் பார்த்திட்டு லேட் நைட் வீட்டுக்கு வர்றதுன்னு ஐடியா பண்ணிட்டு தூங்கப் போனா, அடுத்தநாள் காலை ஆறுமணிக்கே காலிங் பெல் கதறியது. கதவை திறந்தால் என் மாமியாரின் தூரத்து சொந்தம் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார்கள். 'எம் மவனுக்கு அடையார்-ல இண்டர்வியூ,. மெட்ராஸ் போறோம்ன்னு தெரிஞ்சவுடனே சிவகாமியக்கா (என் மாமியார்தான்) நம்ம வூட்டில்தான் தங்கணும்ன்னு சொல்லிடுச்சு. அதான் முதல் நாளே கிளம்பி வந்திட்டோம்'ன்னு சொல்ல, நானும் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை ஆசையாய் உபசரிச்சேன். காலை டிபன் சாப்பிட்ட கையோடு, 'இன்னேரம் சிவகாமி அக்காவா இருந்தா கோழி அடிச்சு குழம்பு வைச்சிருக்கும்" என்று அவர்கள் சொல்ல மதியமே கோழி வாங்கி குழம்பு வைத்தோம்.


அடுத்த நாள் அவங்களை இண்டர்வியூக்கு கூட்டிப் போக என் கணவர்தான் லீவ் போட்டார். அதற்கு அடுத்த நாள் சென்னையை சுத்திக்காட்ட நான் லீவ். ஒருவாரம் கழிச்சு அவங்க ஊருக்கு கிழம்பும் போது, அடிக்கடி வாங்கன்னு சொன்னது தப்புன்னு இன்னிக்கு வருத்தப்படறேன். பத்து நாள் கழிச்சு என் மாமனார் போன் பண்ணினார். தொகுதி எம்.எல்.ஏவைப் பார்க்க ஊர்க்காரங்க அஞ்சு பேர் வருவாங்க, வீட்டில் தங்க வெச்சு நல்லா கவனிச்சு அனுப்பங்கன்னும் சொன்னார். நாங்களும் நல்லாத்தான் பார்த்து அனுப்பினோம். ஆனால் அதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. (எங்க மாமா ஊரில் கவுன்சிலர் எலக்சனில் நின்னு தோத்துப் போனவர், அதுக்கே அரசியல்வாதி கணக்கா மாசத்துக்கு ஒரு தடவை சட்டசபையில் யாரையாவது பார்க்கணும்ன்னு நாலஞ்சு பேரோட கிளம்பி வந்திருவாங்க) சென்னை வந்த ரெண்டாவது மாசம், எங்க நாத்தனாரோட மச்சான் வேலை தேடி சென்னை வர, என் அண்ணன் வீட்டைத் தவிர வேறேங்கும் போகக் கூடாதுன்னு சொல்லியே அனுப்பியிருக்காங்க நாத்தனார். அவன் கொண்டு வந்த காசு ஐஞ்சே நாளில் கரைய, ஆரம்பிச்சது எங்களுக்கு தலைவலி. சொந்தக்காரனாச்சே, அதுவும் நாத்தனாரோட மச்சான், வேற வழி அவன் ஊர் சுத்த ஆட்டோ காசு குடுத்திட்டு நானும் என் ஹஸ்பெண்டும் பஸ் டிக்கெட்டுக்கே கடன் வாங்க வேண்டிய நிலை. இதை இப்படியே விட்டா சரிவராதுன்னு அவனுக்கு ஒரு வேலை தேடிக் குடுத்தோம். அப்பவும் ஒரு மாசம் தங்கிட்டுத்தான் கிளம்பினான். விட்டது ஏழரைன்னு நினைச்சா அதை விட பெரிய பூதமெல்லாம் வந்தது. பக்கத்து வீடுகளில் பத்து நூறுன்னு கை மாத்து வாங்கியிருக்கான். அவங்கெல்லாம் எங்களை கேக்க, பணம் குடுத்து தீர்த்தோம். இது கூட பரவாயில்லைங்க. ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு ரூட் விட்டு ஊர் சுத்திட்டு வேலை கிடைச்சதும் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லாம கழண்டுக்கிட்டான். விசயம் வீட்டில் தெரிய வர, நாங்க வீடு காலி பண்ண வேண்டிய சூழ்நிலை.


அதற்குப் பிறகு இன்னும் ஏழரை எங்க வீட்டில் ரூம் போட்டு உட்கார்ந்தது. ஆமாங்க கோயம்பேடு பஸ் ஸாண்டுக்கு பக்கத்திலேயே குடி போக, ஊரில் இருந்து சும்மான்னாச்சுக்கும் சென்னை வரவங்க கூட எங்க வீட்டுக்கு வந்து தங்க ஆரம்பிச்சாங்க. வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா சந்தோஷப்படாம இப்படி வருத்தப்படறேன்னு நினைக்கிறீங்களா? என் கேரக்டர்-ல ஒரு வாரம் இருந்து பாருங்க தெரியும்.


பெரிய ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கணும்ன்னு ஒரு கூட்டம், ஹை கோர்ட்-ல கேஸ் நடத்துபவர்கள், சென்னையில் இண்டர்வீயூ இப்படி வாரம் ஒருமுறை யாராவது எங்க வீட்டில் இருப்பாங்க. எங்க வீட்டிக்கு `மினி ஹோட்டல்` என்று பக்கத்து வீடுகளில் பெயர் வைக்குபடி ஆகிடுச்சு. பின்னே எப்பவும் எங்க. வீடு ஜே ஜே-ன்னு இருக்கும். காலையிலேயும் நைட்டும் விதவிதமா சமைக்கணும். ஞாயிற்றுக் கிழமை லீவுதானேன்னு ரெஸ்ட் எடுக்க நினைக்க முடியாது. காலையில் ஆறு மணிக்கே கதவு தட்டும் சத்தம் கேட்கும் போது பத்திக் கொண்டு வரும். கொடுமை, வீட்டுக்குள்ள தானே இருக்கறோம்ன்னு நைட்டியோ, ஜீன்ஸ் குர்தாவோ போட்டுக்கிட்டு நிக்க முடியாது. அப்புறம் சிவகாமி மருமக சரியில்லைன்னு சொந்தக் காரங்களுக்கு மத்தியில் பேச்சு வந்திடும். (ஒரு முறை நானும் என் கணவரும் சோபாவில் சேர்ந்து உட்கார்ந்திருக்க, அதெப்படி ஆம்பிளைக்கு சமமா உட்காரலாம்ன்னு என் மாமியாரிடம் யாரோ பத்த வைத்திருக்கிறார்கள்).





ஒரு தடவை ஊரில் திருட்டு கேஸில் மாட்டிக் கொண்ட எங்க சொந்தக்காரர் ஒருவர் போலீஸில் இருந்து தப்பிக்க எங்க வீட்டுக்கு ஓடி வர அவரைத் தேடி போலீஸ் வர, அக்கம் பக்கம் பிரச்சனை ஆகி வேறு வீடு, அப்புறம் ஊரை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி வழக்கம் போல எங்க வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை தேடி வந்த கும்பல் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்ய, வீட்டை காலி செய்தோம். இப்படி நாங்கள் அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டு இருந்தாலும் விருந்தாளிகள் என்ற பெயரில் தொந்தரவுகள் வருவது மட்டும் குறையவில்லை.


சரி, வர்றதுதான் வராங்க, ஒரு போன் பண்ணி சொல்லிட்டு வரலாமே, அதெல்லாம் கிடையாது நேரா பெட்டியோடு வீட்டு வாசலுக்கு வந்திடுவாங்க. (முகவரி உபயம் வேறு யார் என் மாமியாரும் மாமனாரும்தான்). சில பேர் வந்திறங்கிட்டு போன் பண்ணி வந்து கூட்டி போகச் சொல்லுவாங்க. நிக்கிற இடத்தோட அட்ரஸீம் தெளிவா தெரியாது. கண்டுபிடிக்கறதுக்குள் நம்ம தலை உருளும். இன்னும் சில பேர் ஆட்டோ புடிச்சு நேரா வீட்டுக்கு வந்திட்டு, `என்னாம்மா இம்புட்டு காசு கேக்கறான் இந்த ஆட்டோகாரன். நீ பேசி செட்டில் பண்ணு-ன்னு சொல்லிவிட்டு நெடு நெடுன்னு வீட்டுக்குள் போய்டுவாங்க. நாமதான் 200, 300-ன்னு அழணும்.



அப்படியே வந்தாலும் சும்மா-வா இருக்காங்க, படிக்கட்டில் எச்சில் துப்பறது, கிராமத்து பழக்கத்துல பக்கத்து வீடுகள்ல போய் ஊர்கதை கேக்கறதுன்னு எதாவது செய்யப் போய் நாங்க `சாரி` கேக்க வேண்டியிருக்கும். மாசக் கடைசி நேரம் மளிகை கடையில் கடன் சொல்லி சாமான் வாங்க வேண்டியிருக்கும். வந்து செல்பவர்களில் சின்னப் பிள்ளைகள் இருந்தால் ஊருக்குப் போகும் போது காசு தந்து அனுப்ப வேண்டியிருக்கும். சமயத்தில் யாரேனும் எங்களுடன் ஷாப்பிங் வர நேரிட்டால் அவர்கள் வாங்குவதற்கும் பில் கட்ட வேண்டியிருக்கும். இங்க வந்த புதுசில் ஸ்கூல் பசங்களுக்கு டியூசன் எடுத்துக்கிட்டு இருந்தேன். வர்றவங்க நடுஹாலில் உட்கார்ந்து சத்தமா அரட்டை அடிச்சா அந்த புள்ளைங்க எப்படி படிக்கும். மூணே மாசத்தில் டியூசன் வர்றது நின்னிடுச்சு. மாசம் 1500 ரூபாய் வருமானத்திற்கு ஆப்பு. இதில வர்றவங்களுக்காக லீவ் எடுத்தா சம்பளத்தில் கட்.

இதைவிட பர்சனலா ஒரு விசயம் சொல்லட்டுமா, அடிக்கடி ஆட்கள் வர்றதில் என் புருஷன்கிட்ட கூட சரியா பேச முடியறது இல்லை. ஒத்தையா கல்யாணம் ஆகாத இளம் பெண் யாராவது வந்தா அந்த பொண்ணை ஹாலில் தனியா படுக்க வைக்க முடியுமா? அவளுக்கு துணையா பெட்ரூமில் நான் இருக்க, என் புருஷன் ஹாலில் தூங்குவார். ஒருமுறை எண்ட்ரன்ஸ் கோச்சிங்காக வந்த பொண்ணு ஒன்றரை மாசம் எங்க வீட்டில் தங்க, என் புருஷனைப் பார்க்க பாவமா இருந்தது.


என்ன உங்களுக்கே என்னைப் பார்த்தா வருத்தமா இருக்கா? இது சென்னை வாழ்க்கையோட ஒரு பக்கம்தான். இன்னோரு பக்கமும் சொன்னா இன்னும் பீல் பண்ணுவீங்க. ஊரில் இருந்து போன்-ன்னாவே அலற அளவுக்கு எங்க நிலைமை ஆகிப் போயிருச்சு. பின்னே எவனாவது போன் பண்ணி, `அக்கா ஜாவா புக் வாங்கி அனுப்புங்க`ன்னு சொல்லுவான். நானும் பாரீஸ்-ல தேடிப் புடிச்சு வாங்கி அனுப்புவேன். ஊருக்கு போகும் போது அந்த புக் காசு பத்தி வாயே திறக்க மாட்டாங்க. சென்னையில் புடவை கம்மி விலையாமே, குடவுன் தெரு-ல ரெண்டு காட்டன் புடவை எடுத்துவான்னு பக்கத்து வீட்டம்மா சொல்லும். வாங்கிப் போனா கலர் சரியில்லை மாத்தி தாம்பாங்க. அடுத்த முறை ஊருக்கு போகும் போது மாத்திட்டு போனா, இதை விட நல்லதா சைக்கிளில் புடவை விக்கறவன் கொண்டு வருவான்-ன்னு சொல்லுவாங்க. அவன்கிட்டேயே வாங்க வேண்டியது தான பக்கி,-ன்னு கத்த தோணும். இப்படி சயின்ஸ் ரிசர்ச் புக், கவர்மெண்ட் வேலைக்கு அப்பிளிகேஷன், புது மாடல் செல்போன்-ன்னு எதாவது வாங்கிக்கிட்டு போகணும். அதில் பாதிக்கும் பாதி காசு திரும்ப வராது. ஊரில் காது குத்து, கல்யாணம் வைச்சாலும் மறக்காம லீவ் போட்டு போய் வரணும். இல்லாட்டி மெட்ராஸ் போன சிவகாமி புள்ளையும் மருமகளும் நம்மை மதிக்கலைன்னு சொந்தக்காரங்க பேசுவாங்க. அப்புறம் என் மாமியார் சாமியாடாம விடமாட்டாங்க.


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இல்ல எங்க வீட்டுக்கு மட்டும்தான் இப்படி தொல்லைகள் இருக்கா? இல்லை கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் செட்டில் ஆகியிருக்கிற எல்லோரும் இந்த பிரச்சனை இருக்கா? அதை விடுங்க இந்த வாரம் பீரியா சந்தோஷமா வீட்டில் யாரும் இல்லாம நானும் என் புருஷனும் மட்டும் இருக்கோம். அட ஆமாங்க. எங்க தூரத்து சொந்தத்தில் இருந்து சினிமா-ல சேரணும்ன்னு ஒருத்தன் வந்து இருபது நாள் தங்கியிருந்தான். என் மாமனாரோட தங்கச்சி பொண்ணு ஐ.ஏ.எஸ் கோச்சிங்-காக ரெண்டு மாசமா தங்கியிருந்தா.. அவங்க ரெண்டு பேருக்கும் லவ்வாகி ஊரை விட்டு சாரி எங்க வீட்டை விட்டு ஓடிட்டாங்க. நாங்கதான் அதுக்கு உடந்தை-ன்னு ஊரில் எங்க மேல கோபத்தில் இருக்காங்க. `இப்பத்தான் நிம்மதியா இருக்க முடியுதுன்னு என் புருஷனும் சந்தோஷப்படறார். நேத்து ரொம்ப மாசத்துக்கு பிறகு நாங்க ரெண்டு பேர் மட்டும் பீச், சினிமா, அப்படியே ஹோட்டலுக்கும் போனோம். ஊரில் கெட்ட பேரு வந்தாக் கூட பரவாயில்லைங்க. ஞாயிற்றுக் கிழமை ஒன்பது மணி வரைக்கும் தூங்க முடியுதே? அப்பாடி... அது போதும்.. ஹலோ.. இருங்க போன் அடிக்குது.. மறுபடியும் யார் வரப்போறாங்கன்னு தெரியலையே? ஆண்டவா என்னைக் காப்பாத்து..


பின்குறிப்பு: இது நான் சென்னையில் தங்கியிருக்கும் போது- பக்கத்து வீட்டுக்கு அக்காவுக்கு ஏற்பட்ட சம்பவம். அதை அவர் சொல்வது போல எழுதினேன். நிச்சயமாய் நீங்களும் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்து/உணர்ந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..