Thursday, February 25, 2010

என் மீது வீசும் உன் வாசம்

இருள் அறியா
என் கனவுகளுக்கு
கலர் பூசாமல் போகும்
உன் சட்டை வாசத்திற்கு
என்ன திமிர் இருக்கும்?

ஊடல் பொழுதுகள்
நமக்கு தடுப்பு சுவராக
என் துப்பட்டாவுடன்
உறவாடிக் கொண்டிருக்கிறது
உன் சட்டை வாசம்...!

உன்னோடு
நிழலான நாட்களில்
என் காதலுக்கும்
எனக்கும்
பாரமாகிப் போகிறது
உன் சட்டை வாசம்...!


எந்த சட்டத்தாலும்
தடை செய்ய முடியவில்லை...!
என் அழகான மனதை
உன் சட்டை வாசம்
அழுக்காக்கி செல்வதை...!.

ஊர் உறங்கிய பொழுதுகளில்
உன் கனவுக்குள்
நான் வாழ்வதை
கட்டியம் கூறி
பறை சாற்றுகின்றன ....
என் தாவணிக்குள்
கலந்து போன
உன் சட்டை வாசம்....

Monday, February 22, 2010

இந்த பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனி மரியாதை இருக்கும். ஆனால் அவர்கள்  போக்கு எனக்கு அடிக்கடி கோபத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்று தெரியவில்லை..

சமீபத்தில் ஐரோப்பிய  நாடுகள் கூட்டமைப்பு-க்கு செல்ல விசா தரும், நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். விசா எடுப்பதற்கு ஆங்கிலம் அவசியம் என்று அங்கு எந்த சட்டமும் வைக்க வில்லை. அதெல்லாம் இப்போது பிரச்சனை இல்லை.  நான் சொல்ல வந்தது என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருந்த இரு பெண்களைப் பற்றி. இருவரில் ஒருவர் பெயர் தெரியாது.அதனால் பெயர் தெரியாதவர் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்.

தன் மூன்று வயது பையனுடன்  வந்திருந்தார். அந்த பையன்  துரு துரு-ன்னு விளையாடிக் கொண்டிருக்க, 'கம் சிட், டோன்ட் கோ, நோ சவுன்ட்" இப்படி அந்த பையனை அதட்டிக் கொண்டே இருந்தார் அந்தம்மா. கொஞ்ச நேரத்தில் அந்த பையன் பசிக்கிறது என்று அவன் அம்மாவின் துப்பட்டாவை பிடித்துக் கொண்டு அழுதான்.. அப்போது அவனை சமாதானப்படுத்த முயற்சிக்காமல், 'ஒ பேபி.. டோன்ட் கிரை. டோன்ட் ஸ்பாயில் மை டிரஸ்" என்று அப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசினார். (உடனே அவர் தமிழ் தெரியாத இனத்தினர் என்று நீங்கள் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகலாம். கொஞ்ச நேரத்துக்கு முன், அவருக்கு வந்த போனில் பேசிய போது நான்கேட்டது அத்தனையும் 'இன்னா மே" ரக தமிழ் ).
'புள்ள பசிக்கு அழுவதை விட 500 - ரூபாயில் வாங்கிய சுடிதார் பெரிசா" என்று தெரியவில்லை. அழுது அழுது சலித்துப் போனவன் மறுபடியும் விளையாட அரம்பித்துவ் ட்டான். அப்போது எதிர்பாராத விதமாக, அங்கிருந்த இரும்பு சேரில் தலையை இடித்துக் கொண்டான். அதற்காவது அந்தம்மா பதறுவார் என்று நினைத்தேன். இல்லவே இல்லை.''ஐ டோல்டு யு நோ.ஐ டோல்டு யு நோ" என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். பத்தாததுக்கு அந்தப் பையனை வேறு போட்டு அடித்தார். அடிப்பாவி.. புள்ள இடிச்சு தலை வீங்கி இருக்கு.நீயெல்லாம் ராட்சசி-யான்னு திட்டத்தான் தோன்றியது. ஆனால் அந்தம்மா எதைப் பற்றியும்  பற்றி கவலைப் படாமல் பையனை  திட்டிக் கொண்டிருந்தார். எனக்கு என்னவோ, அந்த பையனுக்கு இடித்ததை விட, அம்மாவிடம் அடி வாங்கியதுதான் அதிகமாக வழித்திருக்கும் என்று தோன்றியது.

இந்தப் பெண்கள் என் இப்படி இருக்கிறார்கள்> குழந்தைகள் இவர்களின் மந்திர கோளுக்கு கட்டுபடும் பொம்மையாக இருக்க வேண்டும் என என் நினைக்கிறார்கள்?

அடுத்து சம்பவமும் அதே இடத்தில் தான் நடந்தது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த சித்ரா ஆண்டி-க்கு எப்படியும் ஐம்பது டு அறுபது வயதுக்குள் இருக்கும். தன் பையன் ஐரோப்பிய நாடுகள் ஒன்றில் இருப்பதாகவும் தான் அந்தக் காலத்திலேயே, எத்திராஜ் கல்லூரியில் டிகிரி படித்து முடித்ததாகவும் கூறினார். அவரின் கணவரும் அவருடன் வந்திருந்தார். அவருக்கான அழைப்பு வர, என்கொயரி சீட்டில் அமர்ந்தார். அங்கிருந்த பணியாளர் ஒருவர், பாஸ்போட, பேங்க் ஸ்டேட்மென்ட், டெலிபோன் பில் போன்ற அத்தியாவசிய டாக்குமென்ட் குறித்து கேட்க்க, எல்லாவற்றிற்கும் அவர்  பின்புறம் திரும்பி தன் கணவரை பதில்  கேட்டுக் கொண்டிருந்தார். உங்க பையன் எந்த நாட்டில் இருக்கிறான் என்ற கேள்விக்கும் அதே உரையாடல் தான். 'ஏங்க இவங்க நம்ம பையன் இருக்க நாட்டை கேக்கறாங்க. , ஏங்க என்னை கையெழுத்து  போட சொல்றாங்க.ஏங்க நமக்கு ஏதாவது பிராபர்ட்டி இருக்கான்னு கேக்கறாங்க" இப்படி எல்லாவற்றிற்கும்
 'ஏங்க" தான்.

டென்ஷனான அங்கிருந்த பணியாளர் ஒருவர், மேடம் பிளைட் ஏறும் போது கூட உங்க கணவர்-கிட சம்மதம் கேட்பிங்க போலிருக்கு.. யு.கே. எம்பசியில் இன்னும் கேள்வி கேட்பாங்களே? அதுக்கு நீங்க மட்டும் தனியாத்தானே போகணும்.. என்ன செய்வீங்க'' என்றார்.

அதற்கு அவர் எதோ, குற்றம் சுமத்தப்பட்டவர் போல பயந்தார். அதெப்படி பொண்டாட்டியை இண்டர்வியு பண்றப்போ புருஷன் இருக்க கூடாதா? அதென்ன ரகசியம் வேண்டி கிடக்கு?" என்று சண்டைக்கே வந்து விட்டார். பாவமாகிப் போயிற்று அங்கிருந்த பணியாளரின் நிலை.

எனக்கு அந்த ஆண்டியை பார்த்ததும் கோபமாய் வந்தது. சொந்தமாய் யோசிக்க, பேச, செயல்பட தெரியாமல் மற்றவர்களிடம் சண்டைக்கு ஏன் போக வேண்டும்? அதுவும் டிகிரி படித்தவர், சாதாரனமாக கேட்க்கும் கேள்விகளுக்கே, கணவரிடம் பதில் கேட்டுக் கொண்டிருந்தால், இவர் சுயமாக எதற்கு சிந்திப்பார்?  இந்த பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

Saturday, February 13, 2010

ரயிலும் 'கூ க் கூ" என்று தான் கூவும்.

ரயில் பயணத்தில்
என் முகம் அறையும்
காற்றின் திசையில்
நீ கலந்திருக்கிறாய்!
என் பொழுதுகள்
மூர்ச்சை ஆகின்றன!


 சொல்லவும்
பகிரவும் முடியாத
பல காதல்களை
தனக்குள்
சுமந்து செல்கிறது
தண்டவாளத்தில்
இணை பிரியாத ரயில்.
இருப்பினும்
இன்னும் பாஞ்சாலி
எழுதுகிறாள்
''மாமா உன்னை பார்க்கணும்"


பயணம் முடிந்ததும்
உன் கையில் இருந்த
பயணச்சீட்டு கிழிக்கப்பட்டது.
என் அறையில்
ஒரு பொக்கிஷம் சேர்ந்தது!
காதலும் பிறந்தது!


என் காதல்
எப்போதும்
பயணத்தில் முடிவிலேயே
பறைசாற்றப்படுகின்றன!
கை குலுக்கி
விடை பெற்ற பிறகு!


என்னைத்
தாண்டி செல்கிறது
சமயங்களில்
என்னைத் தவிர்த்து செல்கிறது
நான் பயணம்
செல்ல வேண்டிய
ரயில் வண்டி!
உன்னைப் போல!