Friday, April 30, 2010

அண்ணன் என்பவன் ஒழிக...

தலைப்பைப் பார்த்ததும், ஏதோ பெரிய பட்டாளக் குடும்பத்தில் தங்கையாய் பிறந்திருப்பேன்.. எனக்கு முன் வரிசையாய் அண்ணன்கள் இருப்பார்கள், அராஜகம் நிறைந்தவர்கள், கட்டுப்பாடான குடும்பம் என நினைத்தால், மக்கா அதுக்கு நான் பொறுப்பில்லை..

சுப்பிரமணி‍ பிரேமா தம்பதிக்கு பிறந்த ஒற்றை மகள் நான்.. ('குட்டிச்சாத்தான் வந்து எனக்கு பொண்ணா பொறந்திருக்கு'.. இது பிரேமாவின் டயலாக்).

தமிழ் சினிமாவில் சண்டைப் போடும், கொஞ்சிக் குழாவும் அண்ணன் தங்கைகளை பார்த்து வளர்ந்ததால் எனக்கும் அண்ணன் என்ற உறவு மீது தீராத ஏக்கம் இருந்தது... இருக்கிறது... மிக அழகான அந்த பந்தத்தை நான் நேசிக்கிறேன்.... சந்திக்கும் ஆண்களிடம் நன்கு பழகிய பிறகு, அவர்கள் மீதுள்ள பாசத்தால் அண்ணா என்று உரிமை கொண்டாடுவேன்... என்னுடன் பிறக்காவிட்டாலும், சொந்த தங்கையைப் போல அன்பு செலுத்தும் என் பக்கத்து வீட்டு முருகன்னா, பள்ளியில் கெளரி சங்கர் அண்ணா, கல்லூரியில் ராஜேஷ் அண்ணா, (உடல்நல குறைவினால் என் கல்லூரி இறுதி ஆண்டில் இறந்துவிட்டார்), வேலை பார்க்கும் இந்த அலுவலகத்தில் பிரபு அண்ணா, பிளாக்கில் என் அன்பு அண்ணாச்சி பாலாசி இவர்களைத் தாண்டி, சொல்லிக் கொள்ளும் உறவுகள் எனக்கில்லை..

சரி இதுக்கும் 'அண்ணன் என்பவன் ஒழிக' என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது..... அதை என் கொசுவர்த்தி சுருள் பிளாஸ்பேக்கில் சொல்கிறேன்..

பிளாஸ்பேக் 1.

கல்லூரியில் காலெடுத்துவைக்கும் வரை, அந்நிய ஆண்மகன்களின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காத, குட்டிப்பாப்பா நான்... படிப்பு மார்க் என்று 18 வயது வரை புத்தக புழுவாக இருந்த நான், கல்லூரியில் முதல் வார விடுமுறையில் வீட்டுக்கு வருதற்கும், எங்கள் ஊரில் குத்து விளக்கு பூஜை நடப்பதற்கும் சரியாக இருந்தது..
நட்பு வட்டாரத்துடன், மாலை ஏழு மணி பூஜைக்கு, பகல் 3 மணிக்கே ஆஜர். (அங்கேதான் முதன் முதலில் நான் அண்ணன் என்ற வார்த்தையை  வெறுக்கத் துவங்கினேன்..) கோயிலுக்குள் போய் செட்டில் ஆன கொஞ்ச நேரத்துக்குள்ளேயே, என்னை சீண்ட ஆரம்பித்தான் அவன்.... எங்க கூட்டத்தில் எல்லா பெண்களிடமும் அர்ச்சனை கூடை தந்தான், என் முறை வந்த போது சிரித்துகொண்டே போய்விட்டான்.. அடுத்து 'எண்ணையும் திரியும் தர முடியாது' என மறுத்தான்.. 'காலேஜ் சேர்ந்திட்டா, நீ என்ன பெரிய இவளா' என்று வெளிப்படையாகவே வம்பிழுத்தான்.. அவன் செய்கை பார்த்து நான் விழிக்கவும் 'போடி போடி யாரை வேண்டுமானாலும் கூட்டி வா.. என்னைக் கேட்கட்டும், பதில் சொல்லிக்கிறேன்' என்று வீறாப்பு காட்டினான்.... முதன் முதலால் ஒரு அந்நிய ஆண் என்னை டீ போட்டு கூப்பிடுகிறான்.. நியாயமாய் எனக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெட்கம் வந்தது.. பாரதி ராஜா பட ஹீரோயின் மாதிரி, என்னை முதன் முதல் சீண்டயவனை பிடித்திருந்தது.. என் பார்வைகள் அவனையே சுற்றி சுற்றி வந்தன..குத்து விளக்கு பூஜை முடிந்தது.. நான் வாங்கிய பிரசாதத்தை உரிமையோடு எடுத்து சாப்பிடும் போது சரியாக வந்து சேர்ந்தார் என் தூரத்து உறவு பெரியம்மா.. ''பார்க்கணும், அவக்கிட்ட பேசணும்ன்னு சொன்னியே. இப்போ கேளு" என்று அவர் நிக்க வைத்து பேச, அவனோ என் கண்ணை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். எனக்ககோ எதுவுமே புரியவில்லை. '..உனக்கு பாலாவைத் தெரியலையா.. ஆமா, கல்யாணத்துக்கு  கூட நீ வரலையே?  உன்கிட்ட பேசாம இருக்கான் பாலா" என்றார் பெரியம்மா.. 'என்னது இத்தனை நேரம் என்னை சீண்டியவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று நான் முளிக்க, அதுசரி, வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்தா இப்படித்தான் அண்ணன் தம்பியைக் கூட தெரியாம போய்டும்..  இதுதான் உன் பாலாண்னா... என் பையன்....' என்று அவனை அறிமுகம் செய்து வைத்ததோடு என் கையை பிடித்து அவன் கையில் தந்தார் பெரியம்மா.. மெல்ல உடைந்தது இதயம்..

பிளாஷ் பேக். 2..

பெரிய பெண்ணாக நான் வளர்ந்ததாக நினைத்துக் கொண்டிருந்த   பிறகு,, அதாவது கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் நான் சென்ற கல்யாணம்.. என் கிளாஸ்மெட் சசியுடையது... மாப்பிள்ளை வீடும் எங்களுக்கு உறவுக்காரர்கள் என்பதால் களை கட்டிய கச்சேரி.. அப்போது நான் பார்த்தேன்.. அந்த ஹீரோ ஹோண்டாவின் நாயகனை.. கருப்பாய் களையாய் இருந்தான்.. பல முறை திரும்பி பார்க்க வைத்தான்.. ஒரு முறை சிரித்தேன்.. அவனும் சிரித்தான்.. எங்கே பார்த்த முகமாகவே இருந்தது.. கூட்டத்தில் அவனை மட்டுமே என் கண்கள் தேடின..

என் குடும்பம் மிக கலகலப்பான குடும்பம்.. டி.வியில் டி.ராஜேந்திர் பாட்டு ஓடினால், ஹே 'உன் மாமனாரு' என்றும் நயன்தாரா வந்தால், 'ஹே உன் அக்கா,' என்றும் சிம்பு வரும் போது வெளிப்படையாய் 'உன் சைட் வந்திருக்கான் பாரு' என்றும் நண்டு சிண்டில் இருந்து தாத்தா வரை கிண்டல் பண்ணுவார்கள்.. (அந்தளவுக்கு சிம்பு பைத்தியம்..ஏ.ஆர்.ரஷ்மான்-க்கு சொந்தமான ஸ்டூடியோவில் சிம்புவுடன் ஒரு மீட்டிங்.. அவன் சொல்லுங்க என்று என் பெயரை உச்சரித்ததுக்கே மூன்று நாள் சாப்பிடாமல் இருந்தவள் நான்.. அந்தளவுக்கு அவன் மீது பைத்தியம்). அந்த தைரியத்தில், என் அத்தையிடம் போய் 'யார் அத்தே அந்த பிகர்' என்று அவனைக் கைக் காட்டி கேட்டேன்.. 'ஹே உனக்கு மாமா வீட்டில் வளர்ந்தா சொந்த பந்தம் தெரியாம போய்டுமா? அவன் உங்கண்ணன் கார்த்தி.. பங்காளி வீட்டுப் பையன். முறைப்படி அவன் கல்யாணத்துக்கு நீ சீர் செஞ்சிருக்கணும்..சின்னப் பொண்னுன்னு விட்டிட்டோம்.. இப்ப அவனையே யாருன்னு கேக்குறியா" என்று அவர் திட்ட, நான் 'பிகர்'ன்னு சொன்னது காதில் விழுந்திருக்குமா இல்லையா என்ற பயம் எனக்கு.. இதற்கு இடையில் அவன் எங்கள் அருகில் வந்தான்.. பெரியதாய் சிரித்து என் கன்னத்தை கிள்ளி, 'நல்லாயிருக்கியாட்டா குட்டி' என்றான்.. மறுபடியும் உடைந்தது இதயம்..


பிளாஷ்பேக் 3.

கல்லூரி மூன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. விடுதியில் ஞாயிற்றுக் கிழமை, பத்துமணிக்கு வரைக்கும் தூங்கிய தூக்கத்தை கெடுத்தது அன்று வந்த போன் கால்.. பண்ணியது என் கிளாஸ்மெட் சசிகலா.. (இது வேறோரு சசி).. விசயம் இதுதான்.. காதலித்த பையனை ஓடிப் போய் கல்யாணம் பண்ணி ஐந்து நாள் ஆகிவிட்டது..எனக்கு தகவல் சொல்லத்தான் போன்.. நானே அவள் கேலி செய்கிறாள் என நம்ப மறுக்க, தன் கணவரின் கையில் தந்தாள் போனை.. 'நான் சசியோட ஹஸ்பெண்ட் பேசறேன்.. என் பேரு பிரபு. உன்னைப் பத்தி நிறையா சொல்லிருக்காடா. வீட்டில் பிரச்சனை அதான்.. உன்கிட்ட கூட சொல்ல முடியல" என்றவர் தன் செல்போன் எண்னைத் தந்தார். பிறகு அடிக்கடி அவங்களுக்கு போன் பண்ணி சசியிடமும்  பிரபுவிடமும் பேசுவேன்.. எங்க ஊரு வழக்கப்படி, தோழியின் கணவரை அண்ணா என்று அழைத்து பேசுவேன்.. அவருக்கும் தங்கை இல்லாததால் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார்.. நான்கைந்து மாதத்துக்குள் அந்த சசி அவள் பெற்றோருடன் சேர்ந்துவிட, அடுத்த முறை விடுமுறைக்கு வரும் போது என்னை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.. நானும் அப்படியே சென்றேன்.. பஸ்ஸில் இருந்து இறங்கிய என்னை அழைத்துச் சென்றது சசிதான்... வீட்டுத் திண்ணையில் காலார நான் உட்கார, உள்ளே சென்றாள் சசி.. அப்போதுதான் வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் செல் போன் பேசிக்கொண்டு நடந்த அவனைக் கவனித்தேன்.. கிராமத்து ஆண்களுக்கு உரிய மிருக்கு.. கம்பீரமாய் இருந்தான்.. அவனோ செல் போனில் பேசுவதுமாய் என்னை பார்ப்பதுமாய் இருந்தான்.. நான் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சசி வெளியே வர, 'யார் டீ இது, உங்க ஊரில் இவ்வளவு அழகான பையன்" என்று நான் சொல்வதை காதில் வாங்காமல், ''ஏங்க உங்க தங்கச்சி வந்திருக்கா.. அவளை கவனிக்காம செல்போனில் யார் கூட பேசறீங்க" என்றவள் என்னிடம் திரும்பி 'உங்க பிரபு அண்ணன் எப்பவுமே இப்படித்தான்.. போனில் பேசிக்கிட்டே இருப்பார்" என்பதற்கும் அவன் என்னிடம் வந்து ஹாய் சொல்வதற்கும் சரியாக இருந்தது.. மறுபடியும் உடைந்தது இதயம்.

பிளாஷ்பேக். 4

''எங்க ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா எனக்கு பிடிக்கும்.. காரணம் மஞ்சள் நீர் ஊற்றும் வைபவம்.. நமக்கு பிடித்தவர்கள் மீது மஞ்சள் நீ ஊற்றுவது மிக பிடித்தமானது... ஒவ்வோரு ஆண்டும் புதிதாய் நாம் யார் மீது தண்ணீர் ஊற்றுகிறோம்.. நம் மீது யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள் என்பதில்தான் பரவசம்.. ஊரில் இருந்தா எல்லா மாமன் மீதும் தண்ணீர் ஊற்றி விளையாடிய பிறகு, எதார்த்தமாய் பார்த்தேன் அவனை.. மஞ்சள் தண்ணீர் ஊற்ற ஆசை வர, அவனை நோக்கி நடந்தேன்.. என் நோக்கம் புரிந்து அவன் விலக, நான் தண்ணீருடன் ஓட, ஆனந்தமான நிமிடங்கள்.. அவை.. தேடிப் பிடித்து அவன் மீது மஞ்சள் நீர் ஊற்றிவிட்டு வெற்றிக் களிப்பில் மிதந்தேன்..

அன்று இரவு ஊர் கிணற்றில் விளையாடும் போது சுமதி என்னை நோக்கி வந்தாள்.. (அப்போது அவளுக்கு திருமணம் ஆகி 3 மாதம் ஆகியிருந்தது..உறவு முறையில் என் அத்தை மகள்)..' ஏன்டி உங்க விளையாட்டுக்கு அளவில்லாம போச்சா.. யார் மீது தண்ணி ஊத்தறதுன்னு இல்ல, உங்க அண்ணன் மீதா தண்ணி ஊத்துவ. அறிவிருக்கா உனக்கு.. அவரே கல்யாணத்துக்கு பிறகு இப்பத்தான் நம்ம ஊருக்கு வர்றாரு'.. என்றவாறு தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றாள்... நான் ஊற்றிய மஞ்சள் தண்ணீரில் திளைத்துக் கிடந்தவன், 'கழுதை, உனக்கு என்னை அடையாளம் தெரியல," என்றபடி தலையில் செல்லமாய் ஒரு கொட்டு வைக்க, வலித்தது இதயம்.
பிளாஷ்பேக் 5.

இப்ப வரைக்கும் எங்க ஊர் திருவிழா, பண்டிக்கைக்கு போகும் போது,, அவனைப் பார்ப்பேன்.. அவனும் என்னைப் பார்ப்பான்.. பெயர் தெரியாது.. காரணம் எல்லோருக்கும் அவனை 'சித்ரா வீட்டுக்காரரு" என்று பெயரிட்டு அழைப்பார்கள்..
எங்கக்கா கீதா தான்.. ஒரு முறை சொன்னாள்..  சித்ராவை கட்டின முறையில், அந்தாளு நமக்கு அண்ணன் முறை'என்றாள்.. 'இப்ப அதுக்கு என்ன? அண்ணனாம், குன்னன்'கோபத்தில் கத்தினேன் நான்...

''உங்க ஊரில் எல்லா பொண்ணுகளும் என்கிட்ட பேசறாங்க.. ஆனா பிரேமா-க்கா பொண்ணு மட்டும் பேசறதில்லை.. ஏன் உங்க குடும்பத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஆகாதா" என்று சித்ராவிடம் ஒரு நாள் கேட்டிருக்கிறான் அவன்,,, அதன் பிறகு அவனிடம் நான் பேச முயற்சிக்கவில்லை.. இனிமே என்ன ஆப்ரேஷன் பண்ணினாலும் தாங்காது மக்கா.. என் இதயம்..

இப்ப சொல்லுங்க... அண்ணன் என்பவன் ஒழிந்து போகட்டும்தானே,....

Tuesday, April 27, 2010

நீ கடல்.. நான் அலை..

.'நட்பா காதலா'
அலை பாய்ந்த‌ தருணம் அது!
கரையில் பதிந்த‌
என் காலடி தடத்தை,
'மணலில் ஒரு கவிதை"
என பெயரிட்டாய்.
ஒரு சிப்பிக்குள்
முத்து கண்ட
அத்தருணத்தில் தான் 
கடல்   என் கடவுளானது!
  மணலை அளந்தபடி
'கடலை பிடிக்குமா'
இப்படித்தான்
ஆரம்பித்தாய் நீ..
உன் உதட்டில்
குடியிருந்த
ஒற்றைத்துளியில்
ஆழிப் பேரழை
உருவானது
என் இதயத்தில்!..
 கடற்கரையோர
நடை பயணத்தில்
தெரியாமல்
விழப் போவேன் நான்!
அரவணைத்துக் கொள்ளும்
உன் கரங்களுக்குள்,
தெரிந்து கொண்டே
விழித்துக் கொள்ளும்
என் காதலின் மயக்கம்.!

ஒவ்வோரு
விடைபெறுகையிலும்
என் முகத்தில்
ஒட்டிக்கிடக்கும்
உப்பு காற்றின் வாசம்!
என் முந்தானையில்
ஒளிந்து கிடைக்கும்
உன் தவிப்புகளின்
வாசனைகள்!
சிலிர்த்துப் போகிறது கடல்..
வந்து போன
அலையில்
ஒட்டிக் கிடக்கிறது
என் காதல்.
சென்று வரும்
பேரழையில்
கரைந்து போகின்றன‌
என் ஏக்கங்கள்!

Thursday, April 22, 2010

வோட்காவுடன் ஒரு நாள்.

இந்த பதிவை படித்த பிறகு என் மீது இருக்கும் உங்கள் அபிமானம் மாறிப் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல..

காரணம் முதன் முதலில் நான் தண்ணியடிக்க (அட பைப்பில் இல்லைங்க) காரணமாக இருந்த சம்பவத்தைத்தான் இங்கே..............

இனி கச்சேரி ஆரம்பம்..

சிறுவயதில் அங்கே இங்கே இடம் மாறி, மூன்றாவது படிக்கும் போதுதான் என் மாமா வீட்டில் அடைக்கலம் ஆனேன்.. ஊர் கொத்துக்காரர் என் மாமா.. நான் பிளஸ் டூ படிக்கும் வரை சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.. அப்புறம் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிட்டல் போய் வந்த பிறகு, சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார். ஆனால் அவர் தண்ணியடித்து அதாவது எங்க ஊர் பாஷையில் சொல்வதென்றால் சாராயம் குடித்ததில்லை... அந்த ஏரியா பக்கமே போக மாட்டார். இதனாலேயே எங்க மாமாவுக்கு ரொம்ப மரியாதை.. அவர் வீட்டிலேயே நான் வளர்ந்ததால் எனக்கும் தண்ணியடிப்பவர்களை பிடிக்காது.. பார்க்கவே அறுவருப்பாக இருக்கும்.. (எல்லாம் என் கையில் ஒரு வோட்கா பாட்டில் வரும் வரைதான்).

ஆனால் என் அப்பா அப்படியில்லை.. டீ குடிச்சா நல்லாயிருக்கும்ன்னு அவர் சொன்னாலே தண்ணியடிக்கப் போகிறார்ன்னு அர்த்தம்.(அவரோட கோட் வேட் அது)... தினமும் டீ குடிக்காம அவரால்  இருக்க முடியாது... அவர் நட்பு வட்டமும் அப்படித்தான்..

அவரை நான் சந்திக்கும் சமயமெல்லாம் தண்ணியடிப்பதை பார்த்திருக்கிறேன்.. வளர்ந்த பிறகு, அப்பாவுக்கு முட்டை வறுத்து தந்திருக்கிறேன். அவர் தண்ணியடிக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து சிப்ஸீம், சிக்கனும் சாப்பிட்டிருக்கிறேன்..

என் பெரியம்மாவிற்கு மூன்று மகள்கள்.. ஒற்றை பெண்ணான நான் அவர்களை என் சொந்த சகோதிரிகளாகத்தான் நினைப்பேன்.. நான்  பிளஸ் ஒன் படிக்கும் போதுஎன் அக்காக்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகியிருந்தால், விடுமுறைக்குச் செல்ல எனக்கு நிறைய வீடுகள் இருந்தன..அப்படி ஒரு மே மாதத்தில் தான் நான் தண்ணியடிக்க கற்றுக் கொண்டது..

அட... எங்க மாமா தண்ணியடிப்பார்... நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.. எங்க வீட்டில் யாரும் அப்படி ஒன்றும் மொடாக் குடியர்கள் இல்லை.. ஒரு லார்ஜ் வரை தான்.. ஒயின் ஷாப்பில் போய் தண்ணியடித்து, அதை தெரிந்தவர்கள் பார்ப்பது, பக்கத்து டேபிள்க்காரனிடம் வீண் சண்டை இதை தவிர்க்க, வீட்டிலேயே தண்ணி அடிப்பதில் தப்பில்லை என்பது எங்கள் குடுமபத்தின் கருத்து.. வீட்டு ஆண்கள் மொத்தமாய் சேர்ந்து மாடியிலோ, தோட்டத்திலோ தண்ணி அடிக்க, பெண்கள் ஆம்லேட்டும், சில்லி சிக்கனும் செய்து தருவார்கள்.. அதை டேஸ்ட் பார்ப்பதுதான் என் வேலை..

போகப் போக எனக்கும் சைட்டிஸ் செய்து தருவது பழகிவிட்டது.. நானே உருவாக்கிய சைட்டிஸ் ஒன்றின் ரெசிபி சொல்லட்டுமா?
பொறி, பெப்பர், சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, இதையெல்லாம் பதமாக வருத்து எடுத்து முட்டை பொரியலுடன் கலந்து சாப்பிட,.. அட சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்...

சரி.. நான் தண்ணியடிக்க நேர்ந்த கதையை சொல்கிறேன்...

தமிழ் வருட பிறப்பிற்கு அடுத்த நாள், எங்க அலுவலகத்தின் சார்பில் மூனாறு டூருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ( டூர் என்றால், எங்களுக்கு பைசா செலவில்லை.. எல்லாமே ஆபீஸ் ஸ்பான்ஸர்) சென்னையில் இருந்து பஸ்ஸில் கிளம்பினோம்.. மொத்தம் 120 பேரில் எட்டு பேர் மட்டுமே பெண்கள். அடுத்த நாள் காலையில் உடுமலைப்பேட்டையில் காலை உணவு சாப்பிட்ட போது, எல்லார் கையிலேயும் ஒரு வெள்ளை பேப்பர் தரப்பட்டது..
அதாவது, அன்று இரவு பயர் கேம்பில் தண்ணியடிக்க யார் யாருக்கு என்ன பிராண்ட் வேண்டும் என்பதை எழுதித் தர வேண்டும்.. எங்க ஆபிஸில் இருக்கும் எல்லா ஆண்களும் தங்களுக்கு பிடித்த பிராண்ட் பெயரை எழுதித் தந்தார்கள்.. எங்கள் பெண்கள் குழுவிடம் மட்டும் அந்த வெள்ளை தாள் தரப்படவில்லை.. இது தெரிந்து நாங்கள் கேட்டதும், வேண்டா வெறுப்பாக எங்களிடம் தர, எல்லா பெண்களும், பெப்சி, கோக் என்று எழுதி தர, நான் மட்டும் ஒரு வோட்கா பாட்டிலும் செவன் அப்-பும் என்று எழுதி தந்தேன்..

அப்போதே எல்லோரும் என்னை கிண்டல் செய்ய, அதென்ன ஆணுக்கு ஒரு நியாயம் பெண்க்கு ஒரு நியாயமா, மத்த ஆண்கள் எழுதி தந்தா மட்டும் எதுவும் சொல்லவில்லை-ன்னு வாயாடிக்கொண்டிருந்தேன்..

மதிய உணவின் போது, எங்க சீனியர் ‘கண்டிப்பா உனக்கு வோட்கா வேண்டுமா’ என்றார்... நிஜமாகவே வேண்டும் என்றேன் நான்..

அன்று பயர்  கேம்ப் முடிந்ததும், இரவு உணவு பப்பே முறையில்... எங்க ஆபீஸ் அட்டண்ட் போன் பண்ணி, ‘மேடம் உங்களுக்கு ஒரு பாட்டில் தரச் சொன்னாங்க” என்று பம்மியபடியே, ஒயின் பாட்டில் ஒன்றை மறைத்து மறைத்து குடுத்தார்.. நான் கொஞ்சம் கூட சங்கடப் படாமல், அந்த பாட்டிலை என் டேபிள் மேல் வைத்துவிட்டு சாப்பிட, (அட டின்னர்ங்க) ஒட்டு மொத்த ஆபீஸீம் அதிர்ச்சியாகிப் பார்த்தது .
நானோ கூலாக, மறுபடியும் எங்க அட்டண்டருக்கு போன் பண்ணி, நான் கேட்டது வோட்கா, நீங்க ஏன் ஒயின் குடுத்தீங்க,, என்னை ஏமாத்தறீங்களா, என்று கேட்டேன்.. அவர் மறுபடியும் எங்க ஆபீஸ் சீப்-க்கு தகவல் சொல்ல, என்னை தேடி வந்தது வோட்கா பாட்டில்....

அதற்கும் பூசணிக்கா,(எங்க ஆபீஸில் எனக்கு வைத்த செல்ல்ல்ல்ல்ல பெயர்) வோட்க்கா பாட்டில் வாங்கிடுச்சாம் என்று ஒட்டு மொத்த டூர் டீம்க்கும் தகவல் போய்விட்டது.. பக்கத்தில் இருந்தவர்கள், என்னை அதிர்ச்சியாய் பார்க்க, தொலைவில் இருந்தவர்கள், கேரளா ரோம்மிங்கையும் தாண்டி எனக்கு போன் பண்ணி விசாரித்தார்கள்..

அப்படியே இரவு தூங்குவதற்காக, ஹோட்டலில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்துவிட்டேன்.. நோட் தி பாயிண்ட். அந்த வோட்காவும் ஒயினும் என் ஹேண்ட் பேக்கினுள். அறையில் என்னுடன் வேலை செய்யும் மற்ற இரு பெண்கள்.ஆக களை கட்டியது அரட்டை கச்சேரி..  மறுபடியும் அட்டண்டருக்கு போன் பண்ணி சைட்டிஸ் கேட்டேன்.. அவர் ஒரு சோடா பாட்டிலும் மிக்ஸர் பாக்கெட்டும் தந்தார்.
அதன் பின் பரபரப்பு தொற்றிக் கொண்டது.... குடிக்கலாமா வேண்டாமா, என மனசு குதியாட்டம் போட்டது.. இதற்கு முன் டேஸ்ட் பார்த்தது இல்லை என்றாலும், சின்னதாய் ஒரு ஆர்வம்.. அதற்கு ஆப்பு வைக்க வந்தது ஒரு போன்..
என்னுடன் வேலையை செய்யும் பிரபு அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எல்லோரிடமும் என் அண்ணா என்று அறிமுகம் செய்வேன்.. அவர் போன் பண்ணி தூங்கிட்டியாம்மா என விசாரிக்க,, நான் ஆர்வக் கோளாறில், அண்ணா என்கிட்ட ஒரு ஒயின் பாட்டில் இருக்கு.. உனக்கு தர்றேன் என்று சொன்னதோடு, அப்போதே அட்டண்டர் மூலமாக அவர் அறைக்கு குடுத்து விட்டேன்.

அதன் பிறகு நானும் வோட்கா பாட்டிலும் மட்டுமே..

   நான் குடித்தால் உடன் இருக்கும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.. அதனால் பாட்டிலைப் பார்க்கிறேன்.. யோசிக்கிறேன்.. இந்த கால நேர நகர்தலில் மிக்சரும் சோடா பாட்டிலும் காலி யாகிவிட்டது.. இருப்பினும் அந்த வெள்ளை நிற திர வோட்கா என்னைப் பார்த்து சிரிக்கிறது.. மனசுக்கும் புத்திக்கும் யுத்தம் நடக்கிறது.. குழந்தை குணத்தில் ஒரு குட்டிச்சாத்தான் ஆட்டம் போடுகிறது.. மணி 12‍யை தாண்டி விட்டது.. ஹோட்டல் அறை முழுவதும் நிசப்பதம்.. என் அறையில் இருந்தவர்களும் தூங்கி விட்டார்கள்.. இதுதான் சமயம் என வோட்கா பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன்....

இனி ஓவர் டூ அடுத்த நாள்..

காலை டிபன் சாப்பிடும் போதே, எல்லோரும் ஆர்வமாய், ’வோட்கா குடிச்சியா’  என்று கேட்க, சிரித்து மட்டும் வைத்தேன்.. நீ தண்ணியடிச்சிருக்க, உன் கண்ணைப் பார்த்தாவே தெரியுது என ஏகப்பட்ட கேள்விகள்.. ஆனால் எதற்கும் பதிலில்லை என்னிடம்.... அன்றிறவு டின்னருடன் டூர் முடியப் போகிறது.. பஸ் ஏறினால் அடுத்த நாள், சென்னையில் கொண்டு வந்து விடுவார்கள்.. எல்லோரும் சாப்பிட்டு முடித்து, டூர்க்கு செண்ட் ஆப் குடுக்க போகிற நேரம், கை தட்டி எல்லோர் கவனத்தையும் திருப்பினேன்..

‘’என் கிட்ட ஒரு வோட்க்கா பாட்டில் இருக்கு.. ஆபீஸ்ல இருந்து எனக்கு தந்துதான் என்றதும் எல்லோரும் என்னை உற்று நோக்கினார்கள்.. அப்ப நீ தண்ணி அடிக்கலையான்னு எல்லா விழிகளும் என்னைக் கேட்டன.  ஏனெனில் வாங்கிய எல்லா பிராண்ட் சரக்கும் காலியாக, டூரை முடிவை கொண்டாட அவர்கள் காத்திருந்த சமயம் அது..

நான் வோட்கா பாட்டிலை உயர்த்தி பிடித்தபடி, இதை எனக்கு பிடிச்சவங்களுக்கு தரப் போறேன் என்று சொன்னேன்.. என்னை சைட் அடிக்கும் ஆண்களும் நான் சைட் அடிக்கும் ஆண்களும் ஆர்வமாய் பார்க்க, ரெண்டு நிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு, இதை என் பிரபு அண்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று என் அண்ணனிடமே அந்த பாட்டிலை தந்துவிட்டேன்..
அப்புறம் டூர் முடிந்து எல்லோரும் ஊருக்கு வந்து விட்டோம்..

இதுதான் மக்கா.. நான் முதன் முதலில் தண்ணியடிச்ச கதை.. சரி.. நீதான் வோட்கா பாட்டிலை மோர்ந்து பார்த்தியே‍ன்னு கேக்கிறீங்களா? அட அது மூடி மேல இருந்த லேபிள் கூட கிழிக்காம முகர்ந்து பார்த்தது..

விடுங்க மக்கா.. யார்கிட்டேவாவது, ‘தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்” பாட்டு இருந்தா தாங்களேன்.. ரிங் டோனா வைக்கணும்..

அட, இப்பெல்லாம் நான் ஹம் பண்ற பாட்டு என்ன தெரியுமா?

போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்..
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான்..

எங்க நீங்களும் பாடுங்க........

Monday, April 12, 2010

மெளனம் சம்மதமல்ல!

வெறுப்பை
உரித்துக் காட்ட‌
ஓராயிரம் வார்த்தைகள்
தேவைப்படுகிறது
உனக்கு!
ஆனால்
தண்டனை தர‌
ஒற்றை நிமிட
மவுனம் போதும்
எனக்கு!


மனதுக்குள்
தாழ் இட்டுக்கொண்ட‌
என் மெளனங்களை
உன் கத்தி வீச்சு
வார்த்தைகள்
எப்படி காயப்படுத்தும்?



தெரிந்தே
மெளனம் கொள்கிறேன்..
ஒவ்வோரு படியாக‌
உன்னை
மனதிலிருந்து
இறக்கிய படியே!

தணலில்
சாயம் பூசியது
உன் வார்த்தைகள்!
புன்னகையில்
பூத்து எழும்பும்
என் மெளனங்கள்!
நீ ராட்சசனானதும்
நான் தேவதையானதும்
அந்த கணத்தில்தான்!


பகற் பொழுதின்
மூர்க்கம் மறைத்து
'முத்தமிடவா' என்கிறாய்!
மெளனமாகிறேன் நான்!
உன் கண்களில்
அது சமாதானத்தில் அடையாளம்!
என் பார்வையின்
அது வெறுப்பின்
உச்சகட்டம்!

Saturday, April 3, 2010

பெண் பார்த்த கதை..

தமிழ் சினிமாவைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசுக்குள் பரவசம் இருக்கும்.. சிறுவயது முதல் அதன் மீதான ஏக்கங்களும் உண்டு.. என் வாழ்விலும் அது போன்ற சம்பவங்கள் நடக்காதா என்று ஏங்கியிருக்கிறேன்..


முக்கியமாக பெண் பார்க்கும் படலம்.. ''அதெப்படி ஒரு பெண்ணை காட்சி பொருளாக்கி அவளை காப்பி கொண்டு வரச் சொல்லலாம்.. அவள் என்ன சந்தைப் பொருளா? நாலு பேர் பார்த்து பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்ல? ''என்றெல்லாம் பன்னிரெண்டாவது படிக்கும் போது பேச்சுப் போட்டியில் பேசி பரிசு வாங்கியிருக்கிறேன்.. ஆனால் மனதுக்குள், என்னை பெண் பார்க்க வரும் சம்பவம்  குறித்த ஆயிரம் கனவுகள் இருந்தது..

சினிமாவை தவிர்த்து, பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நான் நேரில் பார்த்தது இல்லை.. அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன்.. அந்த சமயத்தில் எப்படி பேச வேண்டும். எப்படி நடக்க வேண்டும் என்று ஒரு மாஸ்டர் பிளானே இருந்தது..

என்னைப் பார்த்தவுடனே அவருக்கு பிடிக்குமா? உடனே சம்மதம் சொல்வாரா? கல்யாணத்துக்கு இடைப்பட்ட நாளில் எப்படி இருக்கும்? முதன் முதலில் என்ன பேசுவது? என் பெயரை எப்படி செல்லமாய் அழைப்பார் என்று நித்தமும் கனவுகள் சுமந்த பதின் பருவம் எனக்கு பொற்காலங்கள்..

காலங்களும் காட்சிகளும் மாறின.. என்னைப் பெண் பார்க்கும் படமும் ஆரம்பித்தது.. இதுவரை என்னை ஐந்து பேர் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்..
ஆனால் நான் கட்டைவிரல் கோலம் போட்டதில்லை.. காபி சுடும் என்று சொன்னதில்லை.. ஜன்னல் வழியே அவன் சுருள் கேசத்தை ரசித்ததில்லை.. கிளம்பும் போது புன்னகையை பரிசாக பெற்றதில்லை..

இன்னும்  விரிவாக சொன்னால் அப்படி பெண் பார்க்கும் படலம் எனக்கு நிகழ்ந்ததில்லை... ஒரு வசந்த காலத்தை தவறவிட்டிருக்கிறேன் நான்..


''அப்போது நான் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி.. விடுமுறை சமயம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள என் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.. சின்னதாக சலசலப்பும் அதற்கு காரணம் நான் எனவும் என் வீட்டாரின் வார்த்தைகளில் புரிந்து போனது..

மனதுக்குள் குருகுருப்பு எட்டிப் பார்க்க, கடைசியில் என் அத்தையின் மூலமாக விசயம் வெளிவந்தது.. அதாவது ஒரு டாக்டர் என்னை பெண் கேட்டு வந்திருக்கிறார்... எனக்கு திருமண வயது வரவில்லை என்று சொல்லி, அவர்களே அனுப்பி விட்டார்கள்... அது தெரிந்த நிமிடம் முதல் என்  மனசுக்குள் இனம் புரியாத சந்தோஷம்..

பின்னே.. என்னைப் பொறுத்தவரை விவசாயியும், மருத்துவரும்தான் தான் எனக்கு ரோல் மாடல்கள்.. அப்படி ஒரு டாக்டரே என்னை திருமணம் செய்து கொள்ள முன் வந்தது தெரிந்தும் தலைகால் புரியாமல், கட்டை விரலில் கோலம் போட்டு புது வெட்கத்துடனே அலைந்தேன்.. அவர் பெயர் என்ன தெரிந்து கொள்ள மனதுக்குள் ஆர்வம் தோன்ற.. விசாரித்ததில்.. அவர் என் தாத்தாவுக்கு மிகவும் பழக்கமானவர் என்று தெரிந்ததுமே ஜெர்க்கானது..
காரணம் ஹாஸ்பிட்டல் போகவே விருப்பம் இல்லாத தாத்தாவுக்கு எப்படி டாக்டரை தெரியும்? என் கேள்விக்கு ரெண்டே நாளில் விடை கிடைத்தது.. எங்க தாத்தா வீட்டில் இருக்கும் எருமைக்கு உடம்பு சரியில்லாமல் போக, வைத்தியம் பார்க்க வந்த மாட்டு டாக்டர்தான் என்னை பெண் கேட்டிருக்கிறார்..

அடுத்த நிமிடம்''ஓ" என கத்தி கூப்பாடு போட்டுவிட்டேன்.. பின்னே எருமை மாடு கூட சுத்தற ஒரு வெட்னரி டாக்டர் எனக்கு மாப்பிள்ளையா? என்று நான் அழ மொத்த குடும்பமும் என்னைப் பார்த்து சிரித்தது. அதில் இருந்து நான் எதாவது குறும்பு செய்தால், மாட்டு டாக்டருக்கு கட்டி வைத்துவிடுவேன் என்று மிரட்டுவார்கள்..

மனது தேற்றி வந்ததில்,, அடுத்த முறை மாரியம்மன் திருவிழாவிற்கு ஊர்க்கு வந்திருந்தேன்.. அதற்கு முதல் நாள்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் அரவிந்த் என்னும் வழக்கறிஞர் என்னை பெண் கேட்டு சென்றிருக்கிறார்.. படிப்பு முடியட்டும் என்று எங்கள் வீட்டில் சொல்லி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்..

அட.. அதை அவர்களே முடிவு செய்தால் எப்படி? என்னிடம் ஒரு வார்த்தை கேக்க வேண்டாமா? இத்தனைக்கும் அந்த மாப்பிள்ளை என் போன் நெம்பர் கேட்டிருக்கிறார். ஆனால் என் லூசு குடும்பம்  (இது எங்க பேமிலியின் பெட் நேம்) எதும் சொல்லாமல் அந்த ஆளை துரத்திவிட்டிருக்கிறது.. எனக்கு அழுகையாக வந்துவிட்டது.. பாவிங்களா... நான் வெட்கப்பட்டு நடந்து வர்றதுக்கு ஒரு சான்ஸ் குடுங்கன்னா விட மாட்டிங்கறாங்களே?
சரி.. இன்னோரு சந்தர்ப்பம் வரும் என்று நானும் காத்திருந்தேன்..

கடவுள் ரொம்ப நல்லவருங்க;..நான் சிக்சர் அடிக்க இன்னோரு பாலும் போட்டார். பட் வழக்கம் போல என் குடும்பம் பேட் பிடிக்காமல் தடுக்க விட்டுவிட்டது,, இந்த முறையும் லாயர்தான்.. அதுவும் எங்க சொந்தக்காரர்தான்.. கல்யாணத்துக்கு பிறகு என்னை தொடர்ந்து படிக்க வைப்பதாக சொல்ல எல்லோரும் அவரை பிடித்திருக்கிறது..

அதே சமயம் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் எந்த சீர்வரிசையும் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டில் ஏகத்துக்கும் பேச, உஷாரான என் குடும்பம் உணமையாகவே ஒரு போலீஸ் வைத்து அவரைப் பற் றி விசாரித்திருக்கிறது.. கடைசியில் வெளிப்பட்டது குட்டு..

அவனுக்கு ஏற்கனவே வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் ஆகியிருக்கிறது.. அந்த பெண் வெளியூர் சென்ற சமயம் பார்த்து இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.. உண்மை  தெரிந்தும் அவன் வீடு ஏறிப் போய் சண்டை போட்டது என் குடும்பம்.
அந்த மாத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின்சார துறையில் என்ஜினியர் மகேந்திரன் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து பேசியிருக்கிறார்.. வேற்று ஜாதிக்காரர் என்பதால் 'சாரி" சொல்லிவிட்டார்கள் இவர்கள்..

சை.. ''இதுக்கும் மேல நம்மால முடியாதுப்பா.''.. என்று நானே வெறுத்திருத்துப் போயிருந்தேன்.. படிப்பும் முடிய, சென்னையில் பிரபல நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன்.

அப்புறம் என் திருமணம் பற்றி என் வீட்டில் தீவிரம் காட்ட,  நான் மறுத்து வந்தேன்.. ஊருக்கு போகும் போதெல்லாம் யாராவது ஒரு மாப்பிள்ளை பற்றி பேச்சு  அடிபடும். கடைசி கிளைமாக்ஸில்தான் கொதித்துப் போய்விட்டேன் நான்..
'நீ மட்டும் சரின்னு சொல்லு.. ஒரு பிசினஸ் பண்ற பையன் இருக்கான்.. ஜாதகமும் ஓ.கே'' என்று சொன்னார் மாமா..

அப்போது நான் திருமணத்தை வெறுத்திருந்த சமயம்.. வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள்.. ஊருக்கு போகவே வெறுப்பாக இருக்கும்.. என் திருமணப் பேச்சே பெரும் பேச்சாக இருக்கும்.. ஒரு கட்டத்தில் என் மீது தண்ணி தெளித்து விட்டார்கள்.. அப்புறமாய் கிடைத்த தகவல் அந்த பிசினஸ் மேனில் பிசினஸ்.. புண்ணாக்கு மற்றும் மாட்டு தீவனங்கள் விற்பதுதான்.... எங்க ஊரில் இருந்து ஈரோடு போகும் வழியில் அவர் கடை உள்ளதாம்.. விசயம் தெரிந்ததும் எனக்கு சிரிப்புதான்  வந்தது..

அலுவலக நண்பர்களிடன் ஒரு ஓய்வு நேரத்தில் இந்த கதையைச் சொன்னேன்..

''இரு இரு.. முதலில் ஒரு மாட்டு டாக்டர், கடைசியா மாட்டுத் தீவனம் விக்கறவர்.. நீ என்ன உங்க வீட்டு செல்லப் பிராணியா. (அதற்கு மேல் சொன்ன கமெண்ட் எல்லாம் என் மானத்தை வாங்கும் என்பதால் நானே சென்சார் பண்ணுகிறேன்) என்று என்னை காலி செய்துவிட்டார்கள்..

இன்றும் தமிழ் சினிமா பார்க்கும் போதும் அடிக்கடி சிரித்துக் கொள்கிறேன்.. என்ன செய்ய நான்."