சமிபத்தில் முன்னால் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்திக்க சென்றேன். தொடர்பு என்னும் இல்லை. வீட்டு முகவரியும் தெரியாது. தி.நகரில் சிவாஜி கணேசன் ரோட்டில் வீடு என்பது மட்டுமே அலுவலகத்தில் இருந்து எனக்கு தரப்பட்ட தகவல்.
என் ப்லக்கன் (என் டு விலரின் செல்லப் பெயர்) உதவியுடனும், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தி.நகர் ஏரியா வேலைக்கார பெண்மணிகளில் ஆதரவுடனும் ஒருவழியாக வீட்டை கண்டு பிடித்தேன்.
'சார் அமேரிக்கா போயிருக்கார்: வாசலிலேயே வழி மறித்தான் விசுவாசமான கூர்க்கா.
'இல்லை, அவரை நேரில் பார்க்கணும். போன் நெம்பரவது தாங்க" என் கத்தல்களுக்கு கிடைத்த பதில் 'சலோ சலோ"
பரிதாப்பட்ட பக்கத்து வீட்டு வாட்ச்மேன் சொன்னார், ''பிட்டர்ஸ் ரோட்-ல வீடு இருக்கு. போய் பார்.
அங்கேயும் உடன் வந்தது என் ப்லக்கன்.
அங்கேயும் வாட்ச்மேன் தான். ஆனால் இந்த முறை வீட்டுக்குள், வரண்டாவில் உட்கார சேர் தந்தார்கள். இதோ தலைவர் வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார் ஸ்டைலில் சில பல நிமிடங்கள் காக்க வைத்து விட்டு வந்தார்.
''வணக்கம் சார். நல்ல இருக்கிங்களா?"
'ஏன் நல்ல இல்லன்னா என்ன பண்ண போறிங்க?"
என்னிடம் அமைதி.அதை கலைத்தது அடுத்த கேள்வி.
'எதுக்கு வந்தீங்க,?""
''உங்களை பார்க்கத்தான்" மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.
'அதான் பார்தச்சுல; கிளம்புங்க"
முதல் தேதியில் வாங்கும் சம்பளம் நினைவுக்கும் வர, இப்போதும் அதே அமைதி.
நின்று கொண்டே இருக்கும் என்னிடம் கேட்டார்,
'என்ன விஷயம் சொல்லுங்க?"
'சீனியர் சிட்டிசன்- பத்தி உங்க கிட்ட பேசணும்" பயந்து பயந்து வந்தது என் குரல்.
'நான் சீனியரும் கிடையாது. சிட்டிசனும் கிடையாது. என்னைப் பார்க்க யாரும் வேண்டாம். எந்த முட்டாளையும் சந்திக்க நான் விரும்பல. யாரும் வரக் கூடாது-ன்னு தானே வீடு மாறி வந்தேன். இப்பவும் ஏன் வந்து தொந்தரவு பண்ணறிங்க, நீங்க போகலாம்"
அவமானம்
பிடுங்கித் திங்க, கழுத்தில் கிடந்த ஐ.டி.கார்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.
'போங்க, இன்னும் ஏன் நிக்கறிங்க, ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன். வாட்ச்மேன் இவங்களுக்கு கேட் திறந்து விடு." தோரணையில் வந்தது வார்த்தைகள்.
சேற்றில் விழுந்த அருவருப்புடன் வெளியே வந்தேன்.
அந்த வாட்ச்மேன் பார்த்த பார்வை இன்னும், மனசுக்குள் உறுத்தலாய் இருக்கிறது.
டு விலரை எடுக்கும் போது அழக் கூடாது என்ற என் வைராக்கியம் உடைந்து, கண்ணீர் வந்தது. என் வேலையில் அவமானம் புதிது இல்லைதான். இருந்தும் எதோ வருத்தம்.
அலுவலகத்தில் சீனியர் கேட்டார், ''என்ன ஆச்சு"
நடந்த விஷயங்களை சொன்னேன்.
'சரி விடுங்க, அவருக்கு நம்ப ஆபிஸ் மேல கோபம், நாம வேற ஆள்கிட்ட பேசிக்கலாம்."
என்னை அனுப்பி வைத்தவர் சொன்னார். 'நாங்க பார்க்காத அவமானமா? நீங்களும் கத்துக்கங்க"
அவரே ஆறுதலும் சொன்னார்.
''அத்தனை சொத்து இருக்கு. ஆனா ஒரு குழந்தை இல்லை. பதவி போனதும் யாரும் மதிக்கல, அந்த கோபம், வருத்தம், ஆதங்கம் தான் அது. இப்போ கவனிக்க யாரும் இல்லாம முதியோர் இல்லத்துல சேரப் போறார். அவர் மனசின் வலி-தான் உன்கிட்ட பேசினது" என்றார்.
இருந்தும் ஆறவில்லை மனது. அலுவலகத்தின் மீது கோபம் என்றால், அதற்க்கு நான் என்ன செய்தேன்? இந்த சமுதாயத்தின் மீது வருத்தம் என்றால், என்னை அவமானப்படுத்தியது மூலம் அது சரியாகுமா?
சில நாள் என் மனதில் இருந்த கேள்வி மாறி, இப்போது எனக்கும் அவர் மீது பரிதாபப் படத்தோன்றுகிறது.
உங்களுக்கும், எதாவது முதியவரிடம் இந்த அனுபவம் ஏற்படலாம். அப்போது கோபம் வேண்டாம், அந்த முதுமையின் வருத்தத்தை உணருங்கள்.