Monday, March 29, 2010

நானும் சாத்தானும்..

தனிமை சாத்தான் என் எதிர் நின்றது.
தாகம் தணிக்க என் கனவுகள் கேட்டது.


தனிமையில் கரைந்த நாட்கள் எத்தனை..
தலை முடி கோதிய கணங்கள் எத்தனை..
உறுபசியோடு விரல்கள் கோர்த்து
உலகினை மறந்த பொழுதுகள் எத்தனை..

கடல் மணல் பரப்பில் நிலவொளி தன்னில்
மடிதுயில் கண்ட மகிழ்வுகள் எத்தனை..
வரும் வழியெங்கும் நினைவுகள் விதைத்து
திசைகளை மறந்து தவித்தது எத்தனை.....

பகல் வெளியெங்கும் பசியினை மறந்து
தேடித் களைத்த தினங்கள் எத்தனை...
வெட்க சிறகுகள் விரித்துப் பறந்து
முத்தச்சத்தம் மொத்தம் எத்தனை....

அச்சம் துளிர்த்திட ஆரத்தழுவி
சொர்க்கம் கண்ட சுகங்கள் எத்தனை...


எத்தனை எத்தனை என்றது சாத்தான்- இவை
எதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்!
 சித்தக் காதல் துறக்க சென்று - இவை
மொத்தமும் கண்டு வா என்றது...

Monday, March 22, 2010

அவன் என் காதலன்

இது என் முதல் காதலனைப் பற்றிய பக்கங்கள்...

 ''என் முதல் காதலன்'
அறிமுகப்படுத்துகிறேன்
உன்னை!
அதிரச் சிரிக்கிறான்
என் கணவன்...

இரவு நேரத்தில்
உன்னுடன்
ஊர் சுற்றுவதாய்
புகார் செய்கிறார்கள்
அக்கம்பக்கத்தினர்..
என்னை
தைரியமாய்
வளர்த்ததாய்
பெருமைப்படுகிறாள் அம்மா!

என் சந்தோஷ‌
தருணங்களில்
உன்னை
கட்டியணைத்து
முத்தமிடுகிறேன்!
பைத்தியம்
என்கிறது
இந்த சமூகம்..

உனக்கும் எனக்கும்
என்ன உறவு!
விலை கொண்டு
வந்தாய்!
என் உயிர் கொண்டு
வளர்த்தேன்!.
என் முதல்காதல் ஆனாய்!

நீ
என் உயிருக்கும் மேல்
உருகினேன் ஒருநாள்!
பதினைந்தாயிரம்
கூட தேறாது
என்கிறார் அப்பா..



என் காதலனைப் பற்றி..

மார்ச் 22‍ இந்த நாளில் ஒவ்வோருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கலாம்.. என்னைப் பொறுத்தவரை என் முதல் காதலனைச் சந்தித்த நாள்.. இன்று அவனது மூன்றாவது பிறந்த நாள்.. அவனை என் பாய்பிரெண்ட் என்று நட்பு வட்டாரம் சொல்லும்.. நான் செல்லமாய் 'பிளாக்கான்" என்று சொல்லுவேன்...அரசாங்கம் அவனை TN 38 AL 8850  என்று சொல்கிறது..

ஆம்... என் ஸ்கூட்டி டீன்ஸ் டூவீலர்தான் என் முதல் காதலன்..



2007‍ வருடம், நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது அவனை என்னுடன் அழைத்து வந்தேன்.. படிக்கும் போதே என் எழுத்து திறமை மாதம் 4000 வரை சம்பாதிக்க உதவியது.. அந்த சேமிப்பின் முதலீடுதான் என் பிளாக்கான்.. என் வாழ்வில் நான் சம்பாதித்த முதல் சொத்து மற்றும் நம்பிக்கை.. அவன் வந்த பிறகுதான் எனக்கான வசந்தம் வந்தது.. 'பரவாயில்லையே, படிக்கும் போதே சம்பாதித்து வண்டி வாங்கியாச்சு" என்று என் மதிப்பும் கூடியது..  இதுவரை அவனை நான் உயிரற்றவனாய் நினைத்தது இல்லை..


என் புன்னகை, தனிமை, ஏக்கம், சந்தோஷம், துரோகம், கண்ணீர், தவிப்பு, துக்கம் என அனைத்துக்கும் அர்த்தம் அறிந்தவன் அவன்.. சென்னை வந்த புதிதில் நட்பில்லாமல் நான் தவித்த போது, என்னை தாங்கிய சுமைதாங்கி ஆனான். அவனின்றி ஒரு அணுவும்  அசையாது எனக்கு.....  பிரிய மனமின்றி, சர்வீஸ் ஸ்டேசனில் நாள் முழுக்க காத்திருந்து அவனை அழைத்து வந்திருக்கிறேன்..

இதுவரை‍க்கும் என்னை ஒரு நாள் கூட நடுரோடில் தவிக்க விட்டது இல்லை.. ஒத்துழைக்காமல் அழிச்சாட்டியம் செய்தது இல்லை.. 2008‍‍ ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது... சத்தியமாய் அதற்கு என் காதலன் காரணம் இல்லை.. விபத்தில் என் இடது கால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.. முட்டி‍‍யில் உள்ள ஜாயிண்ட் உடைந்து ஸ்குரூ வைக்க வேண்டிய நிலை... 80000 வரை செலவானது. ஆப்ரேஷன் தியேட்டரில் நான் டாக்டரிடம் கேட்ட கேள்வி.. என்னால் மறுபடியும் வண்டி ஒட்ட முடியுமா? முடியும் எனில் எனக்கு ஆப்ரேஷன் செய்யுங்கள். இல்லையெனில் என்னை இப்படியே விட்டுவிடுங்கள் என்று நான் அழுததைப் பார்த்து சகிக்கமுடியாமல் மயக்க ஊசி போட்டார் டாக்டர்..

அந்த கொடுமையிலும் ஒரு சந்தோஷம்.. விபத்தில் என் காதலனுக்கு சின்ன சிராய்ப்பு கூட ஏற்படவில்லை.. அப்படியே ராஜகுமாரன் மாதிரி கம்பீரமாய் நின்றான்.. அதன் பின் படுத்த படுக்கையாய் ஒரு மாதம் இருந்தேன்.. மீண்டும் என்னை பழைய வாழ்க்கைக்கு திரும்ப வைத்தது சத்தியமாய் அவன் மட்டுமே!.

இந்த சென்னை மாநகரத்தில் நானும் அவனும் கால்பதித்த தடங்கள் அதிகம்..

காதல் என்றால் கண்ணீர் உண்டுதானே.. வில்லன் உண்டுதானே...

இதே அவனை விடுத்து, இன்னும் கொஞ்ச நாளில்,  நான் வெளித் தேசம் போகப் போகிறேன்.. அவனில்லா முதல் மற்றும் இறுதிப் பயணம்.. இன்னும் எத்தனை நாட்கள்  எங்கள்  இருவருக்குமான உறவு என்ற நினைப்பில் கண்ணீரில் கரைகிறது என் நிமிடங்கள்.. சத்தியமாய் என் முதல் காதலன் அவன்... நான் திரும்பி வரும் போது அவன் எங்கே எப்படி இருப்பான் என தெரியாது..

அவன் தந்த சந்தோஷமும், பிரிவின் வலியும் என் ஆயுளுக்கும் இருக்கும்...

ஐ லவ் யூ பிளாக்கான்.. ஐ மிஸ் யூ லாட்.....