Tuesday, March 16, 2010

ஸ்டாலினுடன் நேருக்கு நேர்..

சென்னையில் புதிய சட்டசபை கட்டிட வளாகம் திறந்துவைக்கப்பட்டது...
செய்தி..

அதான் ஊரில எல்லா பத்திரிக்கையும், எழுதி துவைச்சு தொங்க விட்டாச்சே, நீ புதுசா என்ன சொல்ல வந்திட்ட? என்று நீங்கள் கேட்க்கலாம். சட்டசபை திறந்தது மேட்டர் இல்லை.. அதனால் மவுண்ட் ரோட்டில் ஏற்படும் டிராபிக்தான் இங்கே அலசல், அவியல், கொத்துபுரோட்டா எல்லாமே!

மாண்புமிகு கலைஞர் அங்கிள் (அதாகப்பட்டது கல்யாணம் ஆன ஆண்களை அங்கிள் என்று மட்டுமே  அழைக்கவேண்டும் என்று எங்கள் அலுவலகத்தில் இளம்பெண்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்தோம்.. அப்படித்தான் எங்களுக்கு தெரிந்த நபர்களையும் அழைப்பது... அது எம்.டி ஆகட்டும் பியூன் ஆகட்டும்,. அந்த வரிசையில் கருணாநிதியும் அங்கிள் ஆகிவிட்டார்.) ஆபீஸ் போக வேண்டுமானால் அதாவது சட்ட சபைக்கு போக வேண்டுமானால், கோபாலபுரத்தில் இருந்து லாயிட்ஸ் ரோடு வந்து மவுண்ட் ரோட்டைத் தொட்டு, (அதாவது ஜெமினி பிரிட்ஜ்‍க்கு அருகில் வந்து கட் அடிப்பார்) அதே வழியில் சட்ட சபைக்குச் செல்வார்.. அந்த வழியாகவே திரும்பி வருவார்... இதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.. பாவம் அங்கிள் இந்த வயதிலும் அயராது உழைக்கிறார்.. அதை நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.

ஆனால் அவர் போலவே பலருக்கும் மவுண்ட் ரோட்டில் ஆபீஸ் இருக்கும். அவர்களும் நேரத்திற்கு போய் சேர வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட்டார் என்பதுதான் வருத்தம்.. காரணம் மவுன்ட் ரோட்டில் ஆபீஸ் இருப்பவர்களுள் நானும் ஒருத்தி..

அங்கிள்‍ ஏற்கனவே கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவுக்கு வரும் போதும் இதே வழியில்தான் வருவார்.. அப்போதும் டிராபிக் ஜாம் ஏற்படும். அதுவும் ஜெமினி மேம்பால இறங்கத்தில் வண்டிகளை நிறுத்தி விடுவார்கள்... பாலம் முழுக்க காரும் டூவிலருமாய் நிக்கும். இதில் சில சைக்கிள் ஆசாமிகள், இடையே புகுந்து இடித்து சைக்கிளை தூக்கிக் கொண்டு முன் செல்ல முனைவார்கள். உறுமிக் கொண்டிருக்கும் வாகன கூட்டம்.. முன்னே செல்லவும் முடியாமல், பின் செல்லவும் முடியாமல் மேம்பாலத்தில் அடிக்கடி மாட்டிக் கொண்டு தவிக்கும் சென்னை வாசிகள் அதிகம்..
(இப்போ துணை முதல்வர் வேற இருக்காறா? இனி அவருக்கும் சேர்த்து, தரிசனத்திற்கு காத்திருக்கும் கூட்டம் கணக்கா, ரோட்டில் நிக்கணும்..)

புதிய சட்ட சபை, திறப்புவிழா அன்னிக்கு சென்னையில் உள்ள குழந்தைகள் சந்தோசமா இருந்ததா கேள்வி.. அட ஆமாங்க.. இவங்க பாட்டுக்கு நாலு மணிக்கு மேல பாதி பஸ் ஓடாதுன்னு அறிவிச்சிட்டாங்க.. உண்மையில பாதி பஸ்கள் மூணு மணிக்கே ஓடல.. அந்த பயத்தில எல்லா ஆபீஸ்க்கும் மதியத்தோட லீவ் விட்டிட்டாங்க.. அம்மா அப்பாவும் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட, புள்ளைங்கல்லாம் சந்தோஷமா ஸ்நாக்ஸ் தின்னுக்கிட்டு அவங்க கூட ஐ.பி.எல் பார்க்க உட்கார்ந்திடுச்சுங்க..ஆக அதுங்க மட்டும் கருணாநிதி அங்கிள்‍க்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கும்.

இனியும்  இந்த தொந்தரவு தொடரும் பாவம் அதுங்களுக்கு தெரியல...ஆமாங்க... ஒரு நாள் சோனியாவும் சர்தார்ஜியும் சாரி மன்மோகன் சிங்‍கும் சென்னை வந்ததுக்கே, அல்லோகப்பட்டது சென்னை.. இனி எந்த வி.ஐ.பி சட்ட சபைக்கு வந்தாலும் மவுண்ட் ரோடு வழியாகத்தான் வருவாங்க.. நாங்களும் நடு ரோட்டில் நிப்போம்... ஒரு வேளை பொதுமக்களை நடு ரோட்டில் நிக்க வைக்கிறதுதான் அவங்க நோக்கமா?

சரிங்க.. இதே மாதிரி டிராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டு நிக்கிறீங்க... அப்போ மந்திரியே போலீஸை கூப்பிட்டு, உங்க பேரைச் சொல்லி.. அவங்க போகட்டும்,‍நாம அப்புறமா போகலாம்‍ன்னு சொல்றார்.. போலீஸீம் உடனே உங்க வண்டிக்கு வழி ஏற்பாடு செய்யறாங்க.. அப்படியே குலுமணாலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி குலுகுலு‍ன்னு இருக்குமே? அப்படி இல்லை என்றாலும் அது போன்ற மனநிலையில் இருந்தேன் நான்...

சம்பவ இடம்: சென்னை அறிவாலயம்..
தேதி: நியாபகம் இல்லை...
நேரம்: அநேகமாக மாலை நாலு மணி..

இனி கதைக்களம்....

அப்போது அறிவாலயத்தில் சன்.டிவி இருந்தது.. அதில் என் பேட்ச்மெட் கோபி கேமராமேனாக வேலை செய்து கொண்டிருந்தான்.. அவனைப் பார்ப்பதற்காக என் டூவீலரின் சென்று இருந்தேன்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் ''உள்ளே" ''வெளியே'' அம்புக்குறிகளை மதிக்க மாட்டேன்.. வெளியே என்று எழுதி இருக்கும் வழியே உள்ளே சென்று,  உள்ளே செல்லும் வழியில் வெளியே வருவேன்.. எல்லாம் என் ஐ.டி கார்டு தரும் தைரியம்..

அப்படி ஒருநாள் என் பேட்ச்மெட்டை பார்த்துவிட்டு வெளிவரும் போது, ''மேடம் வெயிட்" என்று ஏதோ கத்துகிறான் நேபாளி கூர்க்கா.. எனக்கு இந்தி தெரியாததால் அந்த கூர்க்கா‍வின் வார்த்தைகள் புரியாமல் வேகமாக வந்து கொண்டிருந்தேன்... பின்னாடியே அவரும் துரத்திக் கொண்டு வந்தவர் வேகமாக கத்துவதற்கும், நான் சடன் பிரேக் போடுவதற்கும் சரியாக இருந்தது..
காரணம் நான் அங்கு 'உள்ளே' வழியாக வந்த பிரமாண்ட வண்டியினை இடிப்பதற்கு சில அடிகள்தான் வித்தியாசம் இருந்தன... அது வரைக்கும் என் பின்னாடி வந்த கூர்க்கா அமைதியாக, நானும் காரில் இருந்தவரிடம் திட்டு வாங்கும் எண்ணத்துடன்  பார்த்தேன்...


திரில் கதைகளில் வருவது போல, சொல்ல வேண்டுமென்றால், என்ன ஆச்சரியம்... அந்த காரில் இருந்தவர் ஸ்டாலின்.. துணை முதல்வர்...
என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் என் உடம்பு பதறிவிட்டது. காரணம் தப்பு என் மேல்...


அதிர்ச்சியில் அப்படியே என் டூவிலரில் உட்கார்ந்திரூந்தேன்.. அந்த காரின் டிரைவரும் அப்படியே என்னைப் பார்க்கிறார்.. ஸ்டாலின்தான் உடனே  சுதாரித்து அந்த காரை பின்நோக்கி எடுக்கச் சொன்னார்.. கார் பின்செல்ல நான் முன்சென்றேன்... எனக்கு சிரித்துக் கொண்டே வழிவிட்டார் அவர்... ஆனால் எனக்குத்தான் பயத்தில் எதுவும் தோன்றவில்லை.. அறிவாலயத்தை விட்டு வெளியே வந்ததும், என்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது...

இன்று வரை டிராபிக்கில் எதாவது வி.ஐ.பி‍க்காக காத்திருக்கும் போது இந்த நியாபகம் வந்து போகும்..

ஆக இதில் நான் சொல்ல வருவது, துணை முதல்வர் ஸ்டாலினே எனக்கு வழி விட்டு ஒதுங்கிப் போகிறார்.. என் அருமை, பெருமை தெரிஞ்சு.... அதனால ஆனாளப்பட்ட பொது மக்களே கவனமாக இருங்க......

அது!.... அந்த பயம்!....இருக்கட்டும்...

Friday, March 12, 2010

ஏமாற்றுக்கார கடவுள்..

பொழுது ஒன்று
போகா நேரத்தில்
இமையிரண்டும் மூடி
இருகை கோர்த்த‌
ஒரு அசாதாரண நேரத்தில்
வரம் தர வந்தான்
கடவுள் என்பவன்..


கூப்பிய கைகளுக்கு
பரிசு தருவது
அவன் பரம்பரை
பழக்கமாம்!
இஷ்டமானது
கூறு‍ என்றதில்
பட்டியலிட்டது மனது!

ஊர் சுற்ற...
செலவுக்கு பணம் தர..
அழும் போது
ஆறுதல் சொல்ல..
என் பாட்டுக்கு
தலையாட்டி பொம்மையாய்...
இரவு நேர காவலாளியாய்..

அவ்வப்போது
எனக்கு கட்டளையிட்டு...
என் கேள்விகளுக்கு
பதில் சொல்லி
நான் செல்லம் கொஞ்சவும்..
சோர்ந்த நேரம்
பணியாளாய்...
முக்கியமாய்
நான் விளையாட
பொம்மையுமாய்...
எதாவது தா!
என்றேன் கடவுளிடம்!

உடனே அனுப்பி வைத்தான்
கணவன் என்றோருவனை!
 

எல்லாம் சரி..
இந்த டம்மி பீஸ்‍க்கு
முப்பது பவுனும்
ஐந்து லட்சமும் 
கட்டணமாய் வாங்கியதுதான்
கடவுள் செய்த  மோசடி!
 

Wednesday, March 10, 2010

காதல் கதை‍ன்னு சொல்லலாம்‍‍‍ பார்ட் 2

யாராவது அமுதம் வேண்டாம் என்று சொல்வார்களா? மதுமிதா சொல்வாள்!.

ஆம். 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்பதை தீவிரமாக மனதுக்குள் ஜபித்துக் கொண்டிருப்பவள் மதுமிதா. காரணம் அவள் கணவன் திவாகர் அவளிடம் அன்பை வெளிப்படுத்தும் அதீத முறைகள்தான்!.

''சர்ப்ரைஸ் கொடுக்கறேன்னு சில நாள், நான் எழுந்து கோலம் போடப் போறதுக்கு முன்னாடியே வாசல் கூட்டி தெளிச்சு வைக்கிறார். தெருவுல பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?"

''எனக்கு பிங்க் கலர் பிடிக்கும்ன்னு சொன்னேங்கிறதுக்காக ஒரே நேரத்துல பத்து பிங்க் கலர் சுடிதார் எடுத்துட்டு வர்றார்.. வேஸ்ட் தானே?"

''அவங்க அண்ணா, அண்ணிக்கிட்ட .. ''நான் ஏன் பொண்டாட்டிய செல்லமா 'ஏஞ்சல்  "-ன்னுதான் கூப்பிடுவேன்'ங்கிறார். மானம் போகுது."
-இப்படியாக நீளுகின்றன மதுமிதாவின் குற்றசாட்டுகள்.

''என் பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருக்கேன்.. அதை அவகிட்ட நான் பின்ன எப்படிப்பா எக்ஸ்பிரஸ் பண்ணுவேன்?"
-டாஸ்மாக் கடை ஒன்றின் பக்கத்து டேபிளில் இருந்த முகம் தெரியாத நபரிடம் திவாகர் உளறிய வார்த்தைகள் இவை. டாஸ்மாக் போகும் அளவுக்கு அப்படி என்ன குழப்பம் கும்மி அடிக்க ஆரம்பித்து விட்டது?

திருமணம் ஆகி ஐந்து மாதங்கள் கூட முடியவில்லை. மாலை மயங்கிய நேரங்களில் பூவோடு வந்தவனை ''எதுக்கு இவ்வளவு பூ? கொஞ்சமா வாங்கிகிட்டு வாங்கன்னு சொன்னா கேட்க மாட்டிங்களே!"" என்றாள் மது.
அடுத்த நாள் வருத்தம் மறைத்து, 'இன்னிக்கு நான் டின்னர் பண்றேன்" என்று ஆசையாக் கிளம்பியவனை, 'ஆம்பிளையா.. லட்சணமா இருங்க" என்றாள் கண்டிப்புடன்..

மற்றொரு நாள்.. 'உனக்கு பிடிச்ச பாசந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்" என்றவனை, ''ஐயோ... இந்த அஞ்சு மாசமா நீங்க அதையே வாங்கிக் கொடுத்ததுல எனக்கு பாசந்தியே வெறுத்திடுசசுப்பா!'' என்றாள். இப்படியாக ஒவ்வொரு நாளும் வருத்தங்கள் எழுந்தன அவர்களுக்குள். விளைவு... திவாகர் வாங்கி வந்த பூவின் வாசம் சில தினங்களாக தொடர்ந்து மறுக்கப்பட்டது. அவன் டாஸ்மாக் வாசம் பிடிக்கத் துவங்கிவிட்டான்.


 எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்குமாம். ஆனால் இங்கே அதற்கு நேரெதிர்.

திவாகர் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக குட்டிக்கரணம் கூட அடிக்கும் ரகம்.   நண்பர்களுக்கு  அவர்களின் குடும்ப போட்டோக்களைத் தேடி பிடித்து பிறந்த நாளுக்கு
பிரேம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து தானும் சந்தோஷப்படும் பிரியக்காரன். நண்பர்களுக்கு இப்படி சர்ப்ரைஸ்கள் கொடுத்து சந்தோஷப்படுத்துபவன், தன் மனைவிக்காக எத்தனை சர்ப்ரைஸ்களை  தேக்கி வைத்திருப்பான்? அதன் வெளிப்பாடுகள் தான் இப்போது மதுமிதாவின் குற்றசாட்டுகளாக வடிவெடுத்து நிற்கின்றன.


மதுமிதாவும் அன்பானவள் தான். ஆனால் அவள் வளர்ந்த சூழலில் நிலவிய அன்பு பரிமாறல்கள் வேறு ரகம். எப்போதாவது அம்மாவைக் கோயிலுக்கு அழைத்து செல்லும் அப்பாவின் அன்பும், கல்யாண நாளில் மனைவிக்கு புடவை வாங்கிக் கொடுத்து 'நல்லாயிருக்கா?'' எனும் அண்ணனின் அன்பும்தான் அவள் அறிந்தது.

ஆனால், திவாகர் காட்டும் அன்பு அனைத்துமே இவளுக்கு அதிர்ச்சி ரகம்தான். இருவரையும் ஊர் கூடி  உறவு பந்தத்தில் இணைத்து வைக்க, முதலிரவு அன்று கைகளில் பால் ஏந்தி வந்தவளிடம், ''ஒரு சேஞ்சுக்கு பீர் தரமாட்டிங்களா?"" என்று திவாகர் கேலி செய்ய, 'அய்யய்யோ.. ஒரு அயோக்கியன்கிட்ட மாட்டிக்கிட்டோமே" என்று அன்றே பதறிப் போனாள் மது. தொடர்ந்த நாட்களில் சந்தடி சாக்கில் புதுப் பொண்டாட்டியை முத்தமிட துடித்த திவாகரை ரவுடியாக பார்த்தாள். அவனின் சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாமே அவளுக்கு திகட்ட செய்தன. தள்ளித் தள்ளி சென்றாள். ஆனால் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும்.. அன்று காத்திருந்தது.. அவர்களின் இடைவேளைக்கான க்ளைமாக்ஸ்!

திவாகர் மேல் எழுந்த அதிருப்தியை மறக்க, டி.வி சீரியல் பார்க்க ஆரம்பித்திருந்தாள் மது. சீரியலில் கை தவறி கதாநாயகி காபி டம்ளரை கீழே கொட்டி விட, 'பளார்' என கன்னத்தில் அறைந்தான் அவள் கணவன். மதுவுக்கு திவாவின் நினைவு வந்தது. அன்று ஆபீஸ்க்கு கிளம்பியவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது  இவள் கைதவறி சாம்பாரை கொட்டிவிட, 'அட... சாம்பார்ல கூட மார்டன் ஆர்ட் வரைவியா நீ?" என்றபடி வேறு சட்டையை மாற்றிக் கொண்டான். 

அடுத்து ஒரு சீரியல். உடம்பு முடியாமலிருக்கும் தன் மனைவியை என்னவென்று கூட கேட்காமல் இருந்த அந்த சீரியல் கணவனைப் பார்த்தபோது, இவள் தலைவலிக்கு தைலம் தடவிவிட்ட திவாவின் விரல்களை நெஞ்சம் தேடியது.

இரவு இன்னுமொரு சீரியல். மளிகை வாங்க கொடுத்த நூறு ரூபாய்க்கு தன் மனைவியிடம் கறார் கணக்கு கேட்டுக் கொண்டிருந்தான்  அந்த சீரியல் ஹீரோ. திருமணம் முடிந்த மாதமே மது பெயரில் பேங்க் அக்கவுன்ட் ஆரம்பித்து தந்த திவாகரின் நியாபகம் மட்டுமல்ல... அவன் சீக்கிரமாக வரும் மாலை நேரங்களில் தன்னை சுற்றி சுற்றி வருவது, காதுக்குள் 'ஏஞ்சல" என்று கிசுகிசுப்பது, உள்ளங்கையில் முதல் முத்தம் வைப்பது என.. ஒவ்வொன்றாக அவள் மனதுக்குள் மின்னின.

'எத்தனையோ பெண்கள் கணவனோட அன்புக்காக ஏங்கிக் கிட்டிருக்கும்போது, அன்பே கணவனா கிடைச்ச திவாவை புரிஞ்சுக்காம விட்டுட்டோமே" என்று முழு மனதாக வருந்தினாள் மது. வாசலில் திவாவின் அழைப்பு மணி கேட்டது. கதவை திறந்தவள், இந்த கணத்துக்காகத் தான்  காலமெல்லாம் காத்திருந்தது போல அவனைக் கட்டிக் கொண்டாள்.
''என்ன .... மோகினிப் பேய் இன்னுமா சாப்பிடாம இருக்கு?" என்று வழக்கம் போல திவா கிண்டலடிக்க, 'ம்ம் .. ஜோடிப் பேய்க்காக காத்திட்டு இருக்கு" என்று தானும் அவன் மொழி பேசினாள்!.
ஆம்! இங்கே எதிர் எதிர் துருவங்கள் சம புள்ளியில் மையம்  கொண்டுவிட்டன.